Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் பாஜகவுக்கு திரும்பிய கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்!

கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார்

Karnataka former chief minister Jagdish Shettar return to BJP again smp
Author
First Published Jan 25, 2024, 1:58 PM IST

கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் மீண்டும் பாஜகவுக்கு திரும்பியுள்ளார். அமித் ஷா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களை சந்தித்த ஜெகதீஷ் ஷெட்டர், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தன்னை மீண்டும் பாஜகவில் இணைந்து கொண்டுள்ளார். பாஜக மூத்த தலைவரும், தீவிர ஆர்.எஸ்.எஸ்.வாதியுமான ஜெகதீஷ் ஷெட்டர் (68), கடந்த ஆண்டு கர்நாடக சட்டமன்றத் தேர்தலின்போது, சீட் மறுக்கப்பட்டதால் அதிருப்தியடைந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

அந்த தேர்தலில் ஹூப்ளி-தர்வாட்-மத்திய சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட ஜெகதீஷ் ஷெட்டர், பாஜகவின் மகேஷ் தெங்கினகையாலிடம் 34,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். பண பலத்தால் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அப்போது ஷெட்டர் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து அவருக்கு எம்.எல்.சி பதவி அளிக்கப்பட்டது. இந்த பின்னணியில், அப்பதவியை ராஜினாமா செய்து விட்டு ஜெகதீஷ் ஷெட்டர் மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார். “ஜெகதீஷ் ஷெட்டர் மீண்டும் பாஜகவில் இணைந்தது நமக்கு மகிழ்ச்சியான செய்தி. அவரை கட்சிக்கு வரவேற்கிறோம்.” என மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் கூறினார்.

மேற்குவங்க மாநிலத்திற்குள் நுழைந்தது ராகுலின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை!

மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டதாக கர்நாடக காங்கிரஸ் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

“பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளில் தன்னம்பிக்கையான தலைமை இல்லை. அதனால் அவர்கள் கைகோர்த்துள்ளனர். பாஜகவை விலக்கி வைக்கவே எச்.டி. குமாரசாமியை முதல்வராக்கினோம். தற்போது, தனது அரசை வீழ்த்தியவர்களையே குமாரசாமி அரவணைத்து வருகிறார். இந்த அசுத்தக் கூட்டணி இரு கட்சிகளின் நிலைமைக்கு தெளிவான உதாரணம்.” எனவும் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

ராமர் கடவுள் இல்லை: 17 வயது தலித் சிறுவன் மீது தாக்குதல்!

கர்நாடக ஆளும் காங்கிரஸ் கட்சியில் அமைச்சர் பதவியை ஜெகதீஷ் ஷெட்டர் எதிர்பார்த்ததாக தெரிகிறது. ஒருவேளை தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் அமைச்சராகியிருப்பார். தேர்தல் தோல்வி காரணமாக, எம்.எல்.சி. பதவியை அவருக்கு ஆளும் காங்கிரஸ் கட்சி அளித்தது. இருப்பினும், அவர் அமைச்சர் பதவியை எதிர்பார்ததாகவும், ஆனால், காங்கிரஸ் தாமதித்து வந்த காரணத்தால் அதிருப்தியில்  இருந்த அவர், மீண்டும் பாஜகவில் ஐக்கியமாகி விட்டதாக கூறப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கு முன்னதாக அவர் பாஜகவில் இணைந்துள்ளதால், 2024 மக்களவை தேர்தலில் போட்டியிட அவருக்கு பாஜக வாய்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios