டெல்லியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் திமுக எம்.பி., கனிமொழி கலந்து கொண்டு பேசினார்

மாற்றுத்திறனாளிகள் குரலுக்கு செவிமடுக்காமல் 11 ஆண்டுகளாக மாதம் ரூ.300 மட்டும் வழங்கிவரும் இந்திராகாந்தி ஓய்வூதியத்தை ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கனிமொழி எம் பி., முன்னாள் ஒன்றிய அமைச்சர் அஜய் மக்கான், ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும், இந்திராகாந்தி ஓய்வூதிமான ரூ.300 என்பதை ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016ஐ முழுமையாக அமல்படுத்த வேண்டும். பல்நோக்கு அடையாள அட்டையை (யுடிஐடி) முகாம் நடத்தி நாடு முழுவதும் சீராக வழங்க வேண்டும். அதுவரை பயன்கள் பெற யுடிஐடி-யை நிபந்தனை ஆக்க கூடாது. 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும். தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பணி வழங்க வேண்டும். வேலை நாட்களை 150 ஆக அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

என்பிஆர்டி என்னும் ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசியமேடை சார்பில் நடந்த இப்போராட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், பஞ்சாப், ஜம்மு- காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் பங்கேற்றனர். 

ஆளுநரை திரும்பப்பெறும் ஸ்டாலின் கோரிக்கை சரியானதே: கபில் சிபல்!

இந்த போராட்டத்துக்கு சங்கத்தின் அகில இந்திய தலைவர் கிரீஷ் கீர்த்தி தலைமை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, முன்னாள் ஒன்றிய அமைச்சர் அஜய் மக்கான், ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையின் செயல் தலைவர் எஸ்.நம்புராஜன், பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி, பொதுச்செயலாளர் வி.முரளீதரன், நிர்வாகிகள் ஜான்சிராணி, அனிபென் முகர்ஜி, ரிஷிகேஷ் ரஜளி, அதுவய்யா, கைரளி, அகில இந்திய விவசாயிகள் சங்க மதிப்புறு தலைவர் ஹன்னன் முல்லா, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி சோனியா, இந்திய மாணவர் சங்க தலைவர் ஆதர்ஷ், மாற்றுத்திறனாளிகள் தேசிய ஒருங்கிணைப்புக்குழு தலைவர் அர்மன் அலி உள்ளிட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.

டெல்லியில் பெய்து வரும் கனமழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக முக்கமிட்டனர். மழை குறுக்கிட்ட போதிலும் நனைந்தபடியும், குடை பிடித்துக்கொண்டும் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தினர்.