பெங்களூருவில் காலா வினியோகஸ்தர் அலுவலகம் சூறையாடல்...!
காலா திரைப்படம், கர்நாடகாவில் 150 திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், சில கன்னட அமைப்புகள் காலா பட விநியோகஸ்தர்களின்
அலுவலகத்தை சூறையாடியுள்ளனர்.
இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. ரஜினிகாந்த் காவிரி விவகாரத்தில்
தமிழகத்துக்கு ஆதரவாக பேசியதால் அவரது திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கூடாது என கன்னட அமைப்பினர் போர்க்கொடி தூக்கினர். கன்னட
சலுவாளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ், கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் பிரவீண் ஷெட்டி உள்ளிட்டோர் ரஜினியை கண்டித்து
பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, காலா திரைப்படத்தை கர்நாடகாவில் தடை செய்வதாக அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து காலா திரைப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை
விசாரித்த நீதிமன்றம், கர்நாடகாவில் காலா திரைப்படத்தை திரையிடுவதற்கு தடையில்லை என்றும் காலா படம் ரிலீசாகும் தியேட்டர்களுக்கு உரிய போலீஸ்
பாதுகாப்பை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
கர்நாடகாவில் காலா படம் திரையிடுவதற்கு தடை விதிப்பதாக கன்னட அமைப்புகள் கூறியதற்கு, காலா படத்தை கன்னட அமைப்புகள் எதிர்ப்பது சரியல்ல என்றும், காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு முதலமைச்சர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என்றும் நம்பிக்கை உள்ளது என கூறியிருந்தார்.
காலா படத்துக்கு கர்நாடக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்தபோதிலும், சில குறிப்பிட்ட தயாரிப்பாளர்கள் காலா படத்தை வெளியிட முடிவு செய்தனர். இது குறித்து கர்நாடக திரைப்பட வர்த்தக சபை துணைத் தலைவர் உமேஷ் பங்கர், காலா படத்தை தனிப்பட்ட சில விநியோகஸ்தர்கள்
வெளியிடும்போது, அதைத் தடுக்க நாங்கள் விரும்பவில்லை என்றும், அவர்கள் சொந்த பொறுப்பில் படத்தை வெளியிடுகின்றனர் என்றும் கூறினார்.
அதே நேரத்தில் சில கன்னட அமைப்புகள் தொடர்ந்து காலா படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கர்நாடகாவில் நாளை காலா படம் வெளியாகும்போது
தொர்ந்து எதிர்ப்பு தெரிவிப்போம் என்றும், காலா படத்தை பார்க்கக் கூடாது என்றும், காவிரிக்காக அனைவரும் ஓரணியில் திரண்டு காலாவை எதிர்க்க வேண்டு என்றும் கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்திருந்ததார்.
இந்த நிலையில், காலா திரைப்படத்தை வெளியிடும் விநியோகஸ்தர் அலுவலகத்தை, கன்னட அமைப்பைச் சேர்ந்தவர்கள் சூறையாடினர். மேலும் அவர்கள், சாலையில் அமர்ந்து காலா படம் திரையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷம் எழுப்பினர்.