ஜம்மு-காஷ்மீரில் தொடரும் பதற்றம் : போலீஸ் வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் Handwara-வில் போலீசார் சென்ற வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தப்பியோடிய தீவிரவாதிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவத்தினர் நடத்திய 'Surgical Strike' தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளின் ஊடுருவல் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு இந்திய ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் Handwara பகுதியில் நேற்றிரவு சென்றுகொண்டிருந்த போலீஸ் வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். தாக்குதலில் உயிர் சேதம் எற்பட்டதா என்பது குறித்து தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. தப்பியோடிய தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் குறைந்து இயல்பு நிலைய திரும்பி வருவதையடுத்து மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும்
பிரிவினைவாதிகள் நடத்தி வரும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக 100-வது நாளாக இன்றும் கல்வி நிறுவனங்கள், கடைகள், வர்த்தக நிறுனங்கள், பெட்ரோல் பங்குகள் ஆகியவை மூடப்பட்டு போக்குவரத்தும் முடங்கியுள்ளது.