ஏர்செல் மேக்சிஸ் விவகாரத்தில், சன் டிவி குழுமத்திற்கு 743 கோடி ரூபாய் முறைகேடாக அளிக்கப்பட்டது தொடர்பான வழக்கில்,
தயாநிதிமாறன், கலாநிதிமாறன் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகள்பதிவு செய்வது தொடர்பாக, வரும்
2-ம் தேதி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.
தி.மு.க.வைச் சேர்ந்த தயாநிதிமாறன், மத்திய அமைச்சராக பதவி வகித்தபோது ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவைச்
சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு வலுக்கட்டாயமாக விற்பனை செய்யவைத்தார்.

இதற்கு கைமாறாக மேக்சிஸ் நிறுவனம், தயாநிதிமாறனின் சகோதரர் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சன் டி.வி.
நிறுவனத்திற்கு 743 கோடி ரூபாயை முறைகேடாக வழங்கியது என குற்றச்சாட்டுஎழுந்தது.
இதுதொடர்பாக சி.பி.ஐ. மற்றும் மத்திய அமலாக்கப்பிரிவு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டன.

டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில்,
முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், அவரது சகோதரர் கலாநிதிமாறன், கலாநிதிமாறனின்மனைவி
காவேரி உள்ளிட்டோர் மீது ஏற்கெனவே குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, மாறன் சகோதரர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது தொடர்பாக இன்று இறுதி உத்தரவு
பிறப்பிக்கப்படும் என நீதிபதி திரு. O.P. சைனி ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
ஆனால், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வரும் 2-ம் தேதி, மாறன் சகோதரர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.
இதன்மூலம், மாறன் சகோதரர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது தொடர்பாக இறுதி உத்தரவு
பிறப்பிக்கப்படுவது 6-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
