சந்திர பாபு நாயுடு சொந்த ஊரில் உற்சாகமாய் நடைபெற்ற ஜல்லிக்கட்டு…

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து கட்சியினரும், சமூக அமைப்பினரும், கல்லூரி மாணவ, மாணவிகளும் ஆர்ப்பாட்டம் போராட்டம், சாலை மறியல், ரயில் மறியல் உள்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

.ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக தீர்ப்பு வழங்கமுடியாது என உச்சநீதிமன்றமும் அதிரடியாக அறிவித்தது.. இதனால், தமிழக மக்கள் கொதித்து எழுந்துள்ளனர்.

பல்வேறு பகுதிகளில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இதனால், பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

நேற்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஊர்வலம் நடைபெற்றபோது போலீசார் தடியடி நடத்தினர்.

இதில் திரைப்பட இயக்குநர் கெளதமன் காயமடைந்தார்.ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களும் காயம் அடைந்தனர்.

இதேபோன்று எங்கெங்கு ஜல்லிக்கட்டு நடைபெறுகிறதோ அங்கெல்லாம் போலீசார் தீவிரமாக தடுத்து வருகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் இப்படி நடைபெற்று வருகிறது. நமது பக்கத்தில் உள்ள ஆந்திர மாநிலத்தில் பொது மக்கள் தைரியமாக போலீஸ் பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. அதுவும் முதலமைச்சர் சந்திர பாபு நாயுடுவின் சொந்த ஊரில்.

ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திர பாபு நாயுடுவின் சொந்த ஊரான நாராவாரபள்ளியில் இன்று தடையை மீறி போலீஸ் பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

இன்று காலை அப்பகுதியில் 100 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இளைஞர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான பொது மக்கள் ஜல்லிக்கட்டை பார்க்க குவிந்தனர்.

உச்சநீதிமன்ற தடையை மீறி நடப்பதால் போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் தமிழகத்தைப் போல் அவர்கள் பொதுமக்கள் மீது கைவைக்கவில்லை.