பெண்கள் 17 வயதை அடையும் முன் குழந்தை பெறுவது இயல்பானது; மனுஸ்மிருதியைப் படிக்கவும்: குஜராத் உயர்நீதிமன்றம்
கடந்த காலங்களில், பெண்கள் 14-15 வயதுக்குள் திருமணம் செய்துகொள்வதும், 17 வயதிற்குள் குழந்தை பெறுவதும் இயல்பானது என்று குஜராத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில், பெண்கள் 14-15 வயதில் திருமணம் செய்து 17 வயதிற்குள் தாயானார்கள் என்று குஜராத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி தனது 7 மாத கர்ப்பத்தை கலைக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது இந்த கருத்து தெரிவிக்கப்பட்டது.
மைனர் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவர். 7 மாதங்களுக்குப் பிறகுதான் அவர் கர்ப்பமாக இருந்ததை அவரின் தந்தை அறிந்தார். பின்னர் சிறுமியின் வயதை கருத்தில் கொண்டு கருவில் உள்ள சிசுவை கலைக்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மைனர் சிறுமியின் தந்தையின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சிக்கந்தர் சையத், சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் வாதிட்டார். அப்போது சமீர்ஜே டேவ், " கடந்த காலங்களில், பெண்கள் 14-15 வயதுக்குள் திருமணம் செய்துகொள்வதும், 17 வயதிற்குள் குழந்தை பெறுவதும் இயல்பானது. ஆனால் இதற்கு ஒரு முறை மனுஸ்ம்ருதியை படியுங்கள்.” என்று தெரிவித்தார்.
இதை தொடர்ந்து வழக்கறிஞர், ஆகஸ்ட் 18-ம் தேதி பிரசவம் என்று எதிர்பார்க்கப்படுவதால், முன்கூட்டியே விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையிட்டார். இருப்பினும், கரு மற்றும் தாய் இருவரும் நல்ல நிலையில் இருந்தால், கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்க முடியாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
மேலும் ராஜ்கோட்டில் உள்ள சிவில் மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளருக்கு, சிவில் மருத்துவமனையின் மருத்துவர்கள் குழு மூலம் மைனர் பெண்ணுக்கு அவசரமாக மருத்துவப் பரிசோதனை நடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவர்கள் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்த பிறகே இந்த மனு மீது நீதிமன்றம் முடிவு எடுக்கும் என்று தெரிவித்த நீதிமன்றம், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
லிவ்-இன் பார்ட்னரை கொலை செய்து குக்கரில் வேக வைத்த கொடூரம்!