1971ம் ஆண்டு உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நிராகரித்ததே நாட்டின் பொருளாதாரம் மோசம் அடைந்தததற்கு காரணம் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பாஜகவுக்கு எதிரான கொள்கையை கொண்டவர்கள் தான் கருப்பு பணத்திற்கு எதிரான நடவடிக்கையை எதிர்க்கின்றனர் என்றார்.

ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்த ஒடிசா முதல்வர் நவீன் பாட்நாயக் மற்றும் பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் மாேடி தெரிவித்தார். ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையானது ஊழல் மற்றும் கருப்பு பணத்தை ஒழிப்பதற்கான நகர்வு என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
1971ம் ஆண்டு உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை ஒழிக்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நிராகரித்தார், அதுவே நாட்டின் மோசமான பொருளாதார நிலைக்கு காரணம் என்று மோடி குற்றம்சாட்டினார்.
இடதுசாரி கட்சிகள் தங்களது கொள்கைகளில் இருந்து அவர்களாகவே விலகிவிட்டனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார். பினாமி சொத்துக்கள் தடுப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் கடந்த 1988-ம் ஆண்டு முதல் நிலுவையில் இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
காங்கிரஸை பொறுத்த வரை தேசத்தை விட கட்சியே பெரியது. ஆனால் பாஜகவை பொறுத்தவரையில் கட்சியை விட தேசம்தான் மிகப்பெரியது என்றும் மோடி எம்.பிக்கள் கூட்டத்தில் பேசினார். மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 6 நிமிடங்களில் கடன் வழங்கும் காலமானது விரைவில் வரும் என்றும், தேசத்தின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் நரேந்திர மோடி தெரிவித்தார்.
