ரயில் நிலையங்களில் நாளை முதல் முன்பதிவு செய்யலாம்.. இந்திய ரயில்வே அறிவிப்பு
ரயில் நிலையங்களில் நாளை முதல் டிக்கெட் முன்பதிவு செய்ய இந்திய ரயில்வே அனுமதியளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா இன்னும் கட்டுக்குள் வரவில்லை. கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்து, தொடர்ச்சியாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது அமலில் இருக்கும் நான்காம் கட்ட ஊரடங்கில் நிறைய தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலும் அனைத்து கடைகளும் திறக்க அனுமதியளிக்கப்பட்டுவிட்டது. பேருந்து, ரயில், உள்நாட்டு விமானங்களும் கொஞ்சம் கொஞ்சமாக இயக்க தொடங்கப்பட்டுவிட்டன.
ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுவிட்ட நிலையில், ஜூன் ஒன்றாம் தேதி முதல் இயங்கும் ரயில்களுக்கான முன்பதிவுகளை நாளை முதல் ரயில் நிலையங்களிலேயே செய்யலாம் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்ட்டர்களை திறக்க அனுமதியளித்து, ரயில் நிலைய மேலாளர்களுக்கு உத்தரவை வழங்கியுள்ள இந்திய ரயில்வே, டிக்கெட் முன்பதிவு செய்ய வருபவர்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்யுமாறும் இந்திய ரயில்வே உத்தரவிட்டுள்ளது.