பாகிஸ்தான் மாணவர்களின் உயிரை காப்பாற்றிய இந்திய தேசிய கொடி...!
இந்திய தேசிய கொடியை பயன்படுத்தி பாகிஸ்தான் மாணவர்கள் உக்ரைனில் இருந்து பாதுகாப்பாக தப்பித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உக்ரேனில் போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அங்கு படித்து வரும் பல்வேறு நாட்டு மாணவர்கள் சிக்கி தவித்து உள்ளனர்.. இந்தியர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் அங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் பல்வேறு இடங்களில் தஞ்சம் புகுந்தும் சுரங்கப்பாதையில் சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உணவும், குடிக்கத் தண்ணீரும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தங்களை மீட்க நடவடிகை எடுக்கும் படி கண்ணீர் மல்க மாணவ, மாணவிகள் வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர். நேற்று கர்நாடகாவை சேர்ந்த சேகரப்பா என்ற மாணவன் ரஷ்ய படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனால் இந்தியாவில் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து மத்திய அரசு ரஷ்யா மற்றும் உக்ரைன் அரசிற்கு விளக்கம் கேட்டுள்ளது. அதே நேரத்தில் அங்கு சிக்கியுள்ள இந்தியர்கள் போலந்து, ருமேனியா எல்லைகளுக்கு வருமாறு இந்திய அரசு கேட்டுள்ளது.
மத்திய அரசு கூறியபடி ஏராளமான மாணவர்கள் சென்ற நிலையில் மாணவர்களை உக்ரைன் ராணுவத்தினர் தடுத்து நிறுத்தும் நிலையும் ஏற்பட்டது. இதனையடுத்து இந்திய தேசிய கொடியோடு மாணவர்கள் பேருந்திலோ அல்லது கிடைக்கும் வாகனங்களிலோ பயணம் செய்யுமாறு இந்திய அரசு கேட்டுக்கொண்டது. இதனையடுத்து ஏராளமான இந்திய மாணவர்கள் தேசிய கொடியோடு இந்திய எல்லையை அடைந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் மீட்கப்பட்டு ருமேனியாவில் தங்க வைக்கப்பட்ட பின்னர் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.ஆப்ரேசன் கங்கா என்ற திட்டத்தின் கீழ் இந்திய மாணவர்களை ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ ஆகிய விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரும் பணியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் உக்ரைனில் இருந்து ருமேனியாவில் உள்ள புக்கரெடஸ்ட் நகருக்கு வந்த இந்திய மருத்துவ மாணவன் ஒருவன் கூறும்பொழுது உக்ரைனில் பல தடைகளையும் சோதனை சாவடிகளையும் கடக்க வேண்டிய நிலை இருந்ததாக தெரிவித்தார்.
அப்படி கடக்க இந்திய தேசிய கொடி தேவைபட்டதாகவும் உக்ரைனில் இந்திய தேசிய கொடி கிடைக்காத காரணத்தால் கடைகளில் திரைசீலைகள் வாங்கி அதனை வெட்டி அதில் இந்திய மூவர்ண நிறத்தை ஸ்பிரே செய்து இந்திய தேசிய கொடி தயாரித்ததாக இந்திய மாணவன் தெரிவித்தார். இந்த கொடி மூலமாக சோதனை சாவடிகளை கடக்க முடிந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி மாணவர்களும் இந்திய நாட்டு தேசிய கொடியை பயன்படுத்தியதாகவும் இதன் மூலமாக அந்த நாட்டு மாணவர்களும் எல்லைகளை கடக்க முடிந்ததாக தெரிவித்தார். மேலும் துருக்கி மற்றும் பாகிஸ்தான் மாணவர்களுக்கு இந்திய தேசிய கொடி மிகவும் உதவி புரிந்ததாக இந்திய மாணவன் கூறியுள்ளார்.. இதனையடுத்து மொலோடோவா எல்லைக்கு வந்ததாகவும் அங்கிருந்து ருமேனியா எல்லையை அடைய அந்த பகுதி மக்கள் பேருந்துகள் மற்றும் டாக்ஸிகளை தந்து உதவி புரிந்ததாக இந்திய மாணவன் தெரிவித்தார்.