குல்பூஷன் ஜாதவ் வழக்கில் இந்தியாவுக்கு சர்வதேச நீதிமன்றம் திடீர் ‘கெடு’
பாகிஸ்தான் நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர் குல்புஷன் ஜாதவ் தண்டனை ரத்து செய்யக்கோரும் வழக்கில், செப்டம்பர் 13-ந்தேதிக்குள் ஆவணங்களை தாக்கல் செய்ய இந்தியாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூக்கு தண்டனை
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்புஷன் ஜாதவ் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார். அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறியிருந்தது.
தடை
இந்த தண்டனையை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த, நீதிமன்றம், கடந்த மாதம் 18-ந்தேதி குல்புஷன் ஜாதவின் மரண தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை விதித்தது.
ஆவணங்கள் தாக்கல்
இந்நிலையில், இந்தியர் குல்பூஷன் ஜாதவுக்கு ஆதரவான ஆவணங்களை செப்டம்பர் 13-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய இந்திய அரசுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேசமயம், பாகிஸ்தானுக்கு டிசம்பர் 13-ந்தேதிக்குள் ஆவணங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
பொய் சொல்லும் பாகிஸ்தான்
இது குறித்து மத்திய வௌியுறவுத்தறை செய்தித்தொடர்பாளர் கோபால் பாகலே கூறுகையில், “ குல்பூஷன்ஜாதவுக்கு ஆதரவாக ஆவணங்களைத் தாக்கல் செய்ய அதிக கால அவகாசம் இந்தியா கேட்டுக்கொண்டதாக பாகிஸ்தான் கூறுவது பொய்யானது.
4 மாதங்கள்
இந்தியா சார்பில் 4 மாதங்கள் மட்டுமே அவகாசம் கேட்கப்பட்டது. ஆனால், செப்டம்பர் மாதம் வரை மட்டுமே நீதிமன்றம் அவகாசம் வழங்கியது.
இது தொடர்பாக கடந்த 8-ந்தேதி இந்தியா, பாகிஸ்தானின் முகவர்கள் சர்வதேச நீதிமன்ற நீதிபதி ரோனி ஆபிரகாமை சந்தித்து பேசினோம். பாகிஸ்தானுக்கு டிசம்பர் 13-ந்தேதிக்குள் ஆவணங்கள் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இரு நாடுகளும் ஆவணங்களைத் தாக்கல் செய்தபின்புதான் அடுத்த கட்ட விசாரணையை நீதிமன்றம் தொடங்கும்’’ எனத் தெரிவித்தார்.