இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் இரு நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்திவந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் செய்தியை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இருதரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். நிலைமை மேலும் மோசமடையாமல் இருப்பதை உறுதி செய்வதே மார்கோ ரூபியோவின் முதன்மை நோக்கம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் தெரிவித்தார்.

Scroll to load tweet…

பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை:

இனி பாகிஸ்தான் நடத்தும் எந்தவொரு பயங்கரவாதச் செயலும் இந்தியாவிற்கு எதிரான போராகக் கருதப்படும் என்றும், அதற்கேற்ப பதிலடி கொடுக்கப்படும் என்றும் இந்தியா முடிவு செய்துள்ளது என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து இரண்டு நாட்களாக பாகிஸ்தானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்து இந்தியா இந்த முடிவுக்கு வந்துள்ளது.

பாகிஸ்தான் அரசு பயங்கரவாதிகளுக்கும் தங்கள் ராணுவத்துக்கும் தொடர்பில்லை என்று தொடர்ந்து மறுத்து வருகிறது. ஆனால், பயங்கரவாதிகளுக்கு பயற்சி அளித்தும் ஆயுதங்களை வழங்கியும் ஊக்கப்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் பாகிஸ்தானின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியது.

இந்தியாவின் ராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பகிரங்கமாகக் கலந்துகொண்டுள்ளனர். சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ காட்சிகள் இதனை உறுதிபடுத்தின.