பாகிஸ்தானின் பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைமையகம் இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில் தகர்க்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் மசூத் அசாரின் குடும்பத்தைச் சேர்ந்த பத்து பேர் உயிரிழந்தனர், இதில் அவரது சகோதரரும் குழுவின் செயல்பாட்டுத் தளபதியுமான அப்துல் ரவூப் அசாரும் அடங்குவர்.

பாகிஸ்தானின் பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைமையகம், இந்தியாவின் துல்லியமான தாக்குதல்களில் தகர்க்கப்பட்டதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புக்கு பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யின் ஆதரவு அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அந்த அமைப்பின் கட்டளை மையமாக செயல்பட்டு தலைமையகம் இந்தியாவின் தாக்குதலில் சுக்குநூறாகத் தகர்க்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி:

'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி இந்த மிகவும் சக்திவாய்ந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்குள் சுமார் 100 கிலோமீட்டர் தொலைவுக்குச் சென்று இந்திய ராணுவம் தாக்கி இருக்கிறது.

இந்திய ராணுவம் பாகிஸ்தானில் மொத்தம் 9 பயங்கரவாத முகாம்களை தரைமட்டமாக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, பஹவல்பூர் மீதான தாக்குதல் முக்கியத்துவரம் வாய்ந்தமாக உள்ளது.

இந்தத் தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தைச் சேர்ந்த பத்து பேர் உயிரிழந்துள்ளனர். அவரது சகோதரரும், குழுவின் செயல்பாட்டுத் தளபதியுமான அப்துல் ரவூப் அசாரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

பயங்கரவாதி அப்துல் ரவூப் மரணம்:

ஒரு காலத்தில் 24 வயதான அப்துல் ரவூப், 1999 இல் IC-814 விமானக் கடத்தலில் மூளையாகச் செயல்பட்டாவர் ஆவார். 2001 நாடாளுமன்றத் தாக்குதல், 2016 பதான்கோட் தாக்குதல், 2019 புல்வாமா தாக்குதல் போன்ற இந்திய மண்ணில் நடந்த கொடிய பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியில் இருந்தவர் இவர்தான்.

பஹவல்பூர் தளத்தை குறிவைத்தது தற்செயலானது அல்ல, வேண்டுமென்றே செய்யப்பட்டது என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜெய்ஷ்-இ-முகமது தலைமையைத் தகர்ப்பதன் மூலம் அதற்கு ஆதரவு அளித்துவரும் பாகிஸ்தானின் உளவு அமைப்புக்கு நேரடி எச்சரிக்கைச் செய்தியை அனுப்புவதே இந்தத் தாக்குதலில் நோக்கம் என்று சொல்லப்படுகிறது.

தாக்குதல் நடந்த மறுநாள் மசூத் அசார் கடுமையான இழப்புகள் ஏற்பட்டதை ஒப்புக்கொண்டார் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. "என் குடும்பத்தைச் சேர்ந்த பத்து பேர் இறந்துவிட்டனர். அதில் நானும் இருந்திருக்க வேண்டும்," என்று அவர் தெரிவித்துள்ளார்.