income tax dept raid in shivakumar house
கர்நாடக மாநில அமைச்சர் சிவகுமாரின் டெல்லி வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று மூன்றாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
குஜராத் மாநிலத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில், அங்கு பல்வேறு அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன.
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி, பாரதிய ஜனதாவில் இணைந்ததால், அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் தலைமை, 40க்கும் மேற்பட்ட கட்சி எம்.எல்.ஏ.க்களை கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள சொகுசுவிடுதியில் தங்க வைத்தது.

இவர்களை கண்காணிப்பது மற்றும் அதற்கான செலவுகளை கவனிப்பது போன்ற பணிகளை அம்மாநில எரிசக்தித்துறை அமைச்சர் சிவகுமார் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், பெங்களூருவில் உள்ள அவரது வீட்டிலும், டெல்லிஉட்பட பல்வேறு இடங்களில் உள்ள அவருக்குச் சொந்தமான 39 இடங்களில் வருமானவரித்துறையினர் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 10 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
நேற்றைய சோதனையிலும் ஏராளமான ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சோதனைக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், 3ம் நாளாக இன்றும் டெல்லி சப்தர்ஜங் பகுதியிலுள்ள சிவக்குமாருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
