உத்தரபிரதேச மாநிலத்தில், சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ரேஷன் பொருட்களோடு சேர்த்து 1 கிலோ நெய் வழங்கப்படும் என கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்து உள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கின்றன. பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதிவரை 7 கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது, மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

இந்த நிலையில், உ.பி. முன்னாள் முதல்-மந்திரி மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ் ரேபரேலியில் நடந்த தேர்தல் பேரணி ஒன்றில் பேசினார். அவர் பிரசாரத்தில் பேசும்போது, ‘ரேசன் பொருட்களை பெறும் ஏழைகள் தேர்தல் வரை அதனை பெறுவார்கள். தேர்தலுக்கு பின்பு அவர்களுக்கு ரேசன் பொருட்கள் கிடைக்காது.

இதற்கு முன், நவம்பர் வரை வழங்கப்பட இருந்தது. ஆனால், உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியானதும் மார்ச் வரை ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என கூறினார்கள். சமாஜ்வாடியும் ரேசன் பொருட்களை முன்பு வழங்கியது. நாங்கள் ஆட்சியை பிடித்தால் 5 ஆண்டுகளுக்கு ரேசன் பொருட்களை வழங்குவோம். கூடவே, கடுகு எண்ணெய் மற்றும் ஓராண்டில் 2 சிலிண்டர்கள் வழங்கப்படும். அதேபோல. 5 ஆண்டுகளுக்கு இலவச ரேசன், 1 கிலோ நெய் வழங்குவோம்.

எங்களுடைய ஏழை மக்களின் ஆரோக்கியம் மேம்பட, ஒரு கிலோ நெய்யும் வழங்குவோம் என்று கூறினார். பாஜக அரசில், சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. விசாரணைக்கு அழைத்து செல்லப்படும் கைதிகள் மரணம் அதிகரித்து உள்ளது. இரட்டை இயந்திர அரசில் ஊழலும் இரட்டித்துள்ளது என அவர் குற்றச்சாட்டும் தெரிவித்து உள்ளார். அகிலேஷின் இந்த அறிவிப்பு மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.