"கொலையோ பலாத்காரமே செய்யப்படலாம்!" - ஆசிஃபா கொலை வழக்கை விசாரிக்கும் வழக்கறிஞர் தீபாவுக்கு மிரட்டல்!
சிறுமி ஆசிபா கொலை வழக்கை விசாரிக்கும் பெண் வழக்கறிஞர் தீபிகாவுக்கு கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது. பாதுகாப்பு கேட்டு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்போவதாக தீபிகா கூறியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி 8 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ஒருவர் தப்பிக்க உதவிய காவல் அதிகாரி உட்பட 8 பேர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று காஷ்மீர் மாநில பாஜக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில், மெஹ்பூபா முப்தி தலைமையிலான கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பாஜகவைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் கலந்து கொண்டர். இந்த நிலையில், அந்த இரண்டு அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். அவர்களது ராஜினாமா ஏற்கப்பட்டதாக காஷ்மீர் முதலமைச்சர் மெஹ்பூ முப்தி தெரிவித்துள்ளார்.
இதனிடையே கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கதுவா முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இன்று தொடங்குகிறது.
ஆனால், கொலை செய்யப்பட்ட ஆசிஃபாவின் குடும்பத்தினர், வழக்கு விசாரணை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இந்த நிலையில், வழக்கை விசாரிக்கும் பெண் வழக்கறிஞர் தீபிகா சிங் ராஜவத், தனக்கு கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக வழக்கறிஞர் தீபிகா கூறும்போது, இந்த வழக்கை விசாரிக்கும் நான் தனிமைப்படுததப்படுகிறேன். நான் பாலியல் பலாத்காரம் செய்யப்படலாம். கொலை செய்யப்படலாம். நீதிமன்றத்தில் பயிறசி செய்ய என்னை அனுமதிப்பதில்லை. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்போகிறேன் என்றும் நீதி கிடைக்கும்வரை போராடுவேன் என்றும் வழக்கறிஞர் தீபிகா கூறியுள்ளார்.