நான் பசுவின் சிறுநீரை தினமும் குடிப்பதால் தற்போது வரை எனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று போபால் தொகுதியின் பாஜக  எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், வட இந்தியாவில் சிலர் சாணக் குளியல் போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள். கோமியம் குடித்தால் கொரோனா வராது என்று பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் அண்மையில் பேசியது சர்ச்சையானது. இந்நிலையில் பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூரும் தனக்கு ஏன் கொரொனா தொற்று ஏற்படவில்லை என்பது குறித்து பதில் அளித்துள்ளார். போபாலில் நிகழ்ச்சி ஒன்றில் பிரக்யா சிங் தாக்கூர் பங்கேற்றார்.
அப்போது அவர் கூறுகையில், “நான் பசுவின் சிறுநீரை (கோமியம்) தினமும் குடிக்கிறேன். அதனால் நான் எந்த மருந்தையுமே எடுத்துக்கொள்வதில்லை. தற்போது வரை எனக்கு கொரோனா தொற்றும் ஏற்படவில்லை. எனவே, அனைத்து மக்களும் நாட்டு மாடுகளை வைத்திருக்க வேண்டும். அனைவரும் அரசமரம், ஆலமரம், துளசி போன்றவற்றை நட்டு வளர்க்க வேண்டும். அதை நட்டு வளர்க்கும்போது உங்களுக்கு அதிகப்படியான ஆக்சிஜன் என்ற தேவையே இருக்காது. அதனால், போபாலில் ஒரு கோடி மரங்கள் நட உள்ளோம்” என்று தெரிவித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


சாணக்குளியல் போன்றவை மூலம் கொரோனா பரவல் அதிகரிக்கும், விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு மேலும் பல நோய்கள் பரவும் என்று மருத்துவர்கள் ஏற்கனவே எச்சரித்திருந்தனர். இந்நிலையில் பாஜக எம்.பி. கோமியம் குடிப்பதால் தனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று பேசியிருப்பதும் சர்ச்சையாகி உள்ளது.