மும்பையில் நேற்றிரவு கொட்டித் தீர்த்த கனமழையில் மொத்த நகரமும் தண்ணீரில் தத்தளித்து வருகிறது. ரயில் சேவைகள், விமான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை நகருக்கு இன்று விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் திங்கட்கிழமை அதிகாலை கொட்டித் தீர்த்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழையால் நகரில் பிரதாண போக்குவரத்து சேவையான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தெருக்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால், ஏராளமான பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ன.
ஒரே இரவில் 30செமீ மழை!
திங்கள்கிழமை ஒரே இரவில் நள்ளிரவு 1 மணி முதல் காலை 7 மணி வரை பல இடங்களில் சுமார் 300 மிமீ மழை (30 செ.மீ) மழை பதிவானதாக பிரஹன் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (BMC) தெரிவித்துள்ளது.
விடுமுறை அறிவிப்பு
இதுகுறித்து BMC வெளியிட்டுள்ள அறிக்கையில், "மும்பையில் சில தாழ்வான பகுதிகளில் பெய்த கனமழையால், தண்ணீர் தேங்கி, புறநகர் ரயில் சேவைகள் தடைபட்டன. மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் சிரமத்தைத் தடுக்க, மும்பையில் உள்ள அனைத்து BMC, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை எச்சரிக்கை (Rain Alert)
மும்பையில் நாள் முழுவதும் மிதமானது முதல் பலத்த மழை பெய்யும் என்றும், இரவில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரித்துள்ளது. மகாராஷ்டிராவில் அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மத்திய மகாராஷ்டிரா மற்றும் மராத்வாடா பகுதியில் ஜூலை 8 முதல் ஜூலை 10 வரை கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில் சேவை பாதிப்பு
கனமழையால் ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி, மத்திய ரயில்வேயின் புறநகர் சேவைகள் பாதிக்கப்பட்டன.
இதுகுறித்து மத்திய ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி (CRPO) வெளியிட்டுள்ள அறிக்கையில், “சியோன் மற்றும் பாண்டுப் மற்றும் நஹூர் நிலையங்களுக்கு இடையே ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தண்டவாளத்திற்கு மேல் மழைநீர் தேங்கியதால், ஒரு மணி நேரம் ரயில்கள் நிறுத்தப்பட்டன. இப்போது தண்ணீர் சற்று குறைந்துள்ளது, எனவே ரயில்கள் மெல்ல மெல்ல மீண்டும் இயக்கப்படுகின்றன, ஆனால் சேவைகள் முழுவதுமாக தொடங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளன.
Amoeba : ஆற்றிலோ குளத்திலோ குளிக்க போறீங்களா.? காத்திருக்கிறது அமீபா.!! எச்சரிக்கும் தமிழக சுகாதாரத்துறை
மேலும், கனமழை பெய்ததால், சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்தும் தடைபட்டது.
மும்பைக்கு அல்லது வெளியே பறக்கும் பயணிகளுக்கு இண்டிகோ மற்றும் விஸ்தாரா விமான நிறுவனங்கள் ஒரு முன்ன்றிவிப்பை வெளியிட்டுள்ளது.
IndiGo நிறுவனம் அதன் X வலைபக்கத்தில் கூறியுள்ள பதிவில், "கனமழை காரணமாக மும்பையிருந்து வரும் அல்லது செல்லும் விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மாற்று விமானத்தைத் தேர்வுசெய்யவும், அல்லது பயணத்தை ரத்து செய்து அதற்கான முழு பணத்தை திரும்பப்பெற தங்கள் குழுவை தொடர்புகொள்ள அறிவுறுத்தியுள்ளது.
