நூதன முறையில் நடக்கும் ஹவாலா மோசடி – பரபரப்பு தகவல்கள்
ரூபாய் நோட்டுகள் மாற்றியதால், ஹவாலா பண மோசடியில் எந்த தடையும் ஏற்படவில்லை. நூதன முறையில் செயல்பட்டு வருகிறது என பரபரப்பு தகவல்கள் வந்துள்ளன.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8ம் தேதி இரவு மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆனால், ஹவாலா மோசடி மட்டும் எவ்வித பாதிப்பும் இல்லாமல், நூதன முறையில் நடந்து வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, ஐக்கிய அரபு நாடுகளில் வசிக்கும் சிலர் வைத்து இருக்கும் கருப்புப் பணமான 3,500 திர்காம்களை ஹவாலா ஏஜென்ட்களிடம் கொடுப்பார்கள். அதற்கு மாற்றாக ஹவாலா ஏஜென்டுகள் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளாக இந்தியாவில் உள்ள ஒருவரிடம் ஒப்படைப்பார்கள். அந்த பணத்தை பெறுபவர், எவ்வித சிக்கலும் இல்லாமல் தங்களது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்து விடுகிறார்.
அதே சமயம், 3,500 திர்ஹாம்களை இந்திய ரூபாயில் 64 ஆயிரமாக ஹாவலா ஏஜெண்டுகள் மாற்றிக் கொள்வார்கள்.
இந்தியாவில் வசிக்கும் சிலருக்கு, ஹவாலா ஏஜெண்டுகள் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டு, அவர்கள் மூலமாக கருப்பு பணம் வெள்ளை பணமாக மாற்றப்படுகிறது.
ஹவாலா எனப்படும் பண பரிமாற்றம் சௌதி அரேபியா நாடுகளுக்கும், தெற்காசிய நாடுகளுக்கும் இடையே பல காலமாக நடந்து வருகிறது. இங்கு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினால் ஹவாலா மோசடி எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லைத. பாதிக்கவும் செய்யாது என்றார்.