ஒவ்வொரு மூச்சுக்கும் சுடுகாட்டுக்கு பக்கத்துல போய்விட்டு வருகிறோம்..! ஹர்பஜன் சிங் ஆதங்கம்..!
டில்லி, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில், வாழ்க்கை நரகமாகிவருகிறது என கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கடுமையாக சாடியுள்ளார்.
டில்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு மோசமான அளவிற்கு அதிகரித்துள்ளது. டில்லியே புகை மண்டலமாக காட்சியளிக்கும் அளவிற்கு காற்று மாசு அதிகரித்துள்ளது. இதனால் டில்லி மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அந்தளவிற்கு டில்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அடுத்த மாதம் இயல்புநிலைக்குத் திரும்பிவிடும் என்று சமூக வலைதளங்களில் சிலர் கருத்து தெரிவித்துவந்தனர். இந்த கருத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கடுமையாக சாடியுள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் ஹர்பஜன் சிங், நம் சுற்றுச்சூழலை நரகமாக்கி விட்டோம். ஒவ்வொரு மூச்சுக்கும் சுடுகாட்டுக்கு அருகில் சென்றுவிட்டு வருகிறோம். மரணத்தின் அருகில் இருக்கிறோம். சீரியசான விவகாரம், எச்சரிக்கை அறிகுறி, முடிவு நெருங்குகிறது.
மிகப்பெரிய பிரச்சினை என்னவெனில் நாம் இது பற்றி அறியாமையில் இருப்பதே. அடுத்த மாதம் சரியாகிவிடும் என்று சமாதானம் தேடுகிறோம். ஆனால் நாளுக்குநாள் இது மோசமடைந்துதான் வருகிறது என்று சாடியுள்ளார்.