நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால்,இன்று வாழ்த்து அட்டைகளை அனைவரும் மறந்துவிட்டனர். இன்றைய தலைமுறைகளும், வருங்கால தலைமுறைகளும் அதைப்பற்றி அறியாமலே உள்ளனர். அன்பு, நேசத்துடன், நட்பையும், உறவையும் வளர்த்து வாழ்த்து அட்டைகளை தபால் மூலம் அனுப்பும் காலம் மறைந்தே போய்விட்டது.

தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாழ்த்து அட்டைகளை வாங்கி, தபால் மூலம் அனுப்பப்படுவது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்து வந்தது.

எகிப்து நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது வாசனைத் திரவியங்களை அன் பளிப்பாகக் கொடுத்துள்ளனர். ரோம் நாட்டில் ஆலிவ் இலைகளின் மீது தங்க முலாம் பூசிக் கொடுத்து, வாழ்த்துகளை பரிமாறிக் கொண் டனர். அச்சு இயந்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு, வாழ்த்து அட்டைகளை அச்சிட்டு, அதை விற்பனை செய்யும் வழக்கம் தோன் றியது. இதைதொடர்ந்து, 1850ம் ஆண்டுகளில் நவீன வாழ்த்து அட்டை அறிமுகப்படுத்தப்பட்டு வர்த்தக ரீதியாக பயன்பாட்டுக்கு வந்தது.

தமிழகத்தை பொறுத்தவரை பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டுப் பண்டிகைகளின்போது வாழ்த்து அட்டைகளை அனுப்பும் வழக்கம் ஏற்பட்டது. 1970ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரையிலான காலத்தை வாழ்த்து அட்டைகளின் பொற்காலம் என்றே கூறலாம்.

பண்டிகைகளின் தொடக்கத்தில் நண்பர்கள், உறவினர்களிடம் இருந்து வரும் வாழ்த்து அட்டைகளுக்காக காத்திருந்த காலம் அது. அஞ்சல் நிலையங்களில் வாழ்த்து அட்டைகளை பெறுவதற் கென்றே தனி பெட்டிகள் வைக்கப்பட்டன.

அஞ்சல் நிலையங்களில் மலைபோல குவியும் வாழ்த்து அட்டைகளைப் பிரித்து, அனுப்பும் பணியில் தபால் ஊழியர்கள் இரவு பகலாக பணியாற்றிய காலம் உண்டு.

அன்பு, நட்பைப் பரி மாறிக்கொள்ளவும், கசப்புகளை மறந்து, உறவை தொடரவும் உதவிய வாழ்த்து அட்டைகள் வலம் வந்த காலம் மறக்க முடியாத மலரும் நினைவுகள்.

1990ம் ஆண்டில் 50 பைசா முதல் ரூ.200 வரை, பல்வேறு அளவுகள், டிசைன்களில் வாழ்த்து அட்டைகள் விற்பனை ஆனது. ஆனால், அதில் 10 சதவீதம் கூட தற்போது விற்பனையாகவில்லை. அதனை யாரும் பயன்படுத்துவதும் இல்லாமல் போய்விட்டது.

வாழ்த்து அட்டைகளை அனுப்புவது வெகுவாகக் குறைந்துவிட்டாலும், வாழ்த்துகளை அனுப்புவது குறையவில்லை. குறுந்தகவல்களாக செல்போனில் வாழ்த்துகள் அனுப்பப்பட்டன. தற்போது, ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் போன்றவற்றில் வாழ்த்துகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.

நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் பல டிசைன்களில் வாழ்த் துகள் உருவாக்கப்பட்டு, கம்ப்யூட்டர்கள் மற்றும் செல்போன்கள் மூலம் எண்ணற்ற நண்பர்கள், உறவினர்களுக்கு ஒரே நேரத்தில், நொடிப்பொழுதில் வாழ்த்துகள் அனுப்பப்படுகின்றன.

“என்னதான் நவீன வடிவங்களில் வாழ்த்துகளை அனுப்பினாலும், வாழ்த்து அட்டைகளை வாங்கி, அதில் கைப்பட எழுதி, உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்பி நட்பையும், அன்பையும் பரிமாறிக்கொண்ட உணர்வை எதுவும் தராது. எல்லாமே அவசரமான தற்போதைய சூழலில், வாழ்த்துகளை அனுப்புவதும் வெறும் சம்பிரதாயமாகி விட்டது.