Govt employees should admit their childrens in govt school in karnataka

கர்நாடகத்தில் அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைப்பதை கட்டாயமாக்க சட்டம் கொண்டு வர அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

கர்நாடகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை, தரமான கல்வி இல்லை என்று எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, பொதுமக்களிடையே கருத்து நிலவுகிறது. பெரும்பாலும் தனியார் கல்வி நிறுவனங்களையே மக்கள் விரும்புகிறார்கள்.

ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். உள்ளிட்ட ஒருசில அரசு கல்வி நிறுவனங்கள் இதில் விதிவிலக்காக மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது. ஆனால், அரசு வேலையை பெற்றுக் கொண்டு மக்கள் வரிப் பணத்தை ஊதியமாகப் பெறுபவர்கள் தங்கள் குழந்தைகளை, மாநில அரசு நடத்தும் பள்ளிகளில் படிக்க வைக்காமல் தனியார் பள்ளிகளில் படிக்கவைக்கும் போக்கு உள்ளது.

கல்விச் செலவினங்கள் அதிகரிக்கும் சூழ்நிலையில் ஊழிய உயர்வு கேட்டு போராடும் அரசு ஊழியர்கள் அந்த பணத்தை தனியார் கல்வி நிறுவனங்களில் கொட்டி கொடுப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பிரச்னைக்கு தீர்வுகாண திட்டமிட்டுள்ள கர்நாடக அரசு, அரசு, அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை கட்டாயம் அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் படிக்க வைக்க வகைசெய்யும் சட்டத்தை கொண்டுவர முடிவு செய்துள்ளது.