டாக்டர்கள் மற்றும் நர்சுகள் உள்பட 14 பேரை ஒரே நேரத்தில் ரவுண்ட் கட்டிய கொரோனா.. அரசு மருத்துவமனைக்கு சீல்..!
டெல்லி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்பட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த மருத்துவமனை தற்காலிகமாக மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.
டெல்லி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்பட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த மருத்துவமனை தற்காலிகமாக மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. நாளுக்கு நாள் அதன் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், நாட்டின் தலைநகரான டெல்லியில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 128 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2376ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். 808 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட 3வது மாநிலமாக டெல்லி உள்ளது.
இந்நிலையில், டெல்லி ஜஹாங்கிர்புரியில் உள்ள பாபு ஜக்ஜீவன் ராம் நினைவு அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்பட 14 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, அந்த அரசு மருத்துவமனைக்கு தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஒரே நேரத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 14 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.