girls prayer in sabarimala
கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இளம்பெண்கள் வந்து தரிசனம் செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகப் பரவியதையடுத்து, விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
பாரம்பரிய நடைமுறை
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் வரலாற்று புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 10 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நடைமுறை ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்பட்டுவரும் நடைமுறையாகும்.

வழக்கு
கடும்பிரம்மச்சாரியான ஐயப்பன் கோயிலுக்கு, வயது வந்த இளம்பெண்கள் செல்ல அனுமதி கிடையாது என்று பாரம்பரியமானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகளிர் அமைப்புகள் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
இளம்பெண்கள் தரிசனம்
இந்த சூழ்நிலையில், சபரிமலையில் சமீபத்தில் இளம் பெண்கள் சிலர் கூட்டமாக சாமி தரிசனம் செய்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. பாரம்பரிய கட்டுப்பாடுகள் கொண்ட சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் இளம் பெண்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், எப்படி தரிசனம் செய்தனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதையடுத்து, கேரள மாநில அரசு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

விசாரணை
இது குறித்து தேவசம்போர்டு அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரனிடம் திருவனந்தபுரத்தில் நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில், “ சமூக ஊடகங்களில் உலவும் புகைப்படங்கள் குறித்தும், யார் தரிசனம் செய்தார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்த வேதசம்அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொழிலதிபருக்கு சலுகை
கொல்லம் நகரைச் சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபருக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு, சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது என புகார் எனக்கு வந்துள்ளது. அந்த புகாரில், கோயிலுக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்ட வயதுடைய பெண்கள், எப்படி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள் என்று கேட்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை
பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும் வயதுடைய பெண்களைத் தவிர மற்றவர்கள் தரிசனம் செய்ய தடை ஏதும் இல்லை. அதேசமயம், வி.ஐ.பி. தரிசனச் சலுகையை தவறாகப் பயன்படுத்தி இருந்தால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனத் தெரிவித்தார்.
