உலகிலேயே பெரிய Green Park.. விண்வெளியில் இருந்து பார்த்தாலும் தெரியுமாம் - அதானி பகிர்ந்த புகைப்படம் வைரல்!
World's Biggest Green Park : உலக அளவில் புகழ்பெற்ற அதானி குழுமம், குஜராத்தில் உள்ள ரான் ஆஃப் கட்ச் பாலைவனப் பகுதியில், 726 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உலகின் மிகப்பெரிய பசுமை எரிசக்தி பூங்காவை அமைத்து வருகின்றது.
ட்விட்டர் தளத்தில், அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, இந்த புதிய பசுமை எரிசக்தி பூங்கா, சுமார் 20 மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க 30 GW உற்பத்தி செய்யும் என்றார். "உலகின் மிகப்பெரிய பசுமை எரிசக்தி பூங்காவை நாங்கள் உருவாக்கும்போது புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இந்தியாவின் ஈர்க்கக்கூடிய முன்னேற்றங்களில் முக்கிய பங்கு வகிப்பதில் பெருமிதம் கொள்கிறோம் என்றும் அவர் கூறினார்.
சவாலான ரான் பாலைவனத்தில் 726 சதுர கிமீ பரப்பளவை உள்ளடக்கிய இந்த மிக பிரம்மாண்டமான திட்டம், விண்வெளியில் இருந்து கூட தெரியும். இதில் நாங்கள் சுமார் 30 ஜிகாவாட் வரை சக்தியை உற்பத்தி செய்வோம். 20 மில்லியனுக்கும் அதிகமான வீடுகளுக்கு இது மின்சாரம் அளிக்கும்" என்று கெளதம் அதானி போட்ட ட்விட்டர் போஸ்ட் தெரிவித்துள்ளது.
"மேலும், வெறும் 150 கிமீ தொலைவில், நமது கர்மபூமி முந்த்ராவில், சூரிய மற்றும் காற்று சக்தியை கொண்டு இயங்கும் உலகின் மிக விரிவான மற்றும் ஒருங்கிணைந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றை உருவாக்குகிறோம். இது நிலையான ஆற்றலை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
தற்போது கட்டுமானம் நடந்து கொண்டிருக்கும் பெரிய அளவிலான திட்டம் வடிவம் பெறுவதைக் காணக்கூடிய சில படங்களைப் பகிர்ந்துள்ளார் அதானி. இந்த அதானி குழுமத் திட்டம் இந்தியாவின் பசுமை ஆற்றல் திறனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் அது COPல் அளித்த காலநிலை நடவடிக்கை உறுதிமொழிகளை அடைய உதவுகிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உமிழ்வு தீவிரத்தை 45 சதவீதம் குறைக்க இந்தியாவும் இலக்கு வைத்துள்ளது. இறுதியாக, இந்தியா 2070க்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை உறுதி செய்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.