இனி வரிசையில் காத்திருக்க வேண்டாம்... வீடு தேடி வரப்போகிறது டீசல்..!!
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகத்தின் திட்டமான பெட்ரோல், டீசலை வீட்டுக்கே கொண்டு வந்து அளிக்கும் முறை பெங்களூரு நகரில் பல பகுதிகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக டீசல் மட்டும் டோர் டெலரி செய்யப்பட்டு வருகிறது.
மை பெட்ரோல் பம்ப்
இதனால், பெங்களூருவாசிகள் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் நிற்காமல், வீட்டில் இருந்தவாரே mypetrolpump.com என்ற இணையதளத்திலும், 7880504050 என்ற எண்ணுக்கு அழைப்புச் செய்தும் டீசலை வீட்டு வாசலில் பெற்றுக் கொள்கின்றனர். ‘மை பெட்ரோல் பம்ப்’ என்ற பெயரில் பெங்களூருவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குறைந்தபட்சம் 20 லிட்டர்
குறைந்தபட்சம் ஒருவர் 20 லிட்டர் டீசல் வரை வாங்க வேண்டும். 100 லிட்டர்வரை ரூ.99 சேவைக் கட்டணமாக வாங்கப்படுகிறது, 100 லிட்டர் டீசலுக்கு அதிகமாக வாங்குபவர்களுக்கு லிட்டருக்கு ஒரு ரூபாய் என்ற வீதத்தில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கிடைக்கும் இடங்கள்
பெங்களூரு மாநகரில் உள்ள எச்.எஸ்.ஆர். லேஅவுட், கோரமங்களா, பெலந்தூர், பி.டி.எம். லேஅவுட், பொம்மணஹல்லி ஆகிய இடங்களில் இந்த சேவை அளிக்கப்பட்டு வருகிறது. காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பெட்ரோல்,டீசல் வீட்டு வாசலுக்கே வந்து கொடுக்கப்படும்.
பள்ளிகள், மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வர்த்தக கட்டிடங்களில் ஆகியவற்றில் நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்கள், அங்கிருக்கும் ஜெனரேட்டர்களுக்கு டீசல் அதிகமாக வாங்கப்படுகிறது.
எதிர்ப்பு
கடந்த ஏப்ரல் மாதம் 21-ந்தேதி மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான் விடுத்த அறிவிப்பில், விரைவில் மக்களுக்கு வீடுக்கே பெட்ரோல், டீசல்கொண்டு வந்து கொடுக்கும் முறை செயல்படுத்தப்பட உள்ளது எனத் தெரிவித்தார். இது திட்டவடிவிலேயே இருக்கிறது என்றார். ஆனால், இந்த திட்டத்துக்கு பெட்ரோல் நிலைய முகவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தினால், தங்கள் வர்த்தகத்தை இது பாதிக்கும் எனத் தெரிவித்தனர்
விதிமுறைகள் கடைபிடிப்பு
இதற்கிடையே பெங்களூரில் இந்த சேவைச் செய்யும் மை பெட்ரோல் பம்ப், சார்பில் விடுத்த அறிக்கையில் “ தாங்கள் முறையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, அங்கீகரிக்கப்பட்ட பெட்ரோல் முகவர்களிடம் இருந்துதான், டீசல்பெறுகிறோம். தரத்திலும், அளவிலும், அரசின் விதிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்கிறோம். முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இது செயல்படுத்தப்படுகிறது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதி இல்லை
ஆனால், பெட்ரோலியம் மற்றும் வெடிமருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் இணைத் தலைவர் ஏ.கே. யாதவ் கூறுகையில், “ வீடுகளுக்கே சென்று டீசல் விற்கும் திட்டத்துக்கு நாங்கள் இதுவரை அனுமதி அளிக்கவில்லை. இது பாதுகாப்பானது அல்ல. போலீசார் அந்த நிறுவனம் மீது நடவடிக்ைக எடுக்க வேண்டும் ’’ என்றார்.