2022-ல் பதவியேற்ற முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், ராஜினாமா செய்த பல மாதங்களுக்குப் பிறகும், அவருக்கு இன்னும் அதிகாரப்பூர்வ அரசு இல்லம் ஒதுக்கப்படவில்லை. தற்போது டெல்லியில் உள்ள ஒரு தனியார் பண்ணை வீட்டில் தங்கியிருக்கிறார்.

முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பதவியை ராஜினாமா செய்து பல மாதங்கள் ஆகியும் அவருக்கு இன்னும் அதிகாரப்பூர்வ அரசு இல்லம் ஒதுக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

2022-ஆம் ஆண்டு இந்தியாவின் 14-வது குடியரசு துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற ஜக்தீப் தன்கர், உடல்நலக் காரணங்களை முன்னிட்டு கடந்த ஜூலை 21, 2025 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளன்று அவர் மேற்கொண்ட இந்தத் திடீர் முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பண்ணை வீட்டில் தற்காலிக வாசம்

பதவி விலகிய சில வாரங்களுக்குப் பிறகு, செப்டம்பர் மாதத்தில் அவர் குடியரசு துணைத் தலைவருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தைக் காலி செய்தார். தற்போது அவர் தெற்கு டெல்லியில் உள்ள சத்தர்பூர் (Chhatarpur) பகுதியில் இருக்கும் ஒரு தனியார் பண்ணை வீட்டில் தங்கி வருகிறார்.

இந்தப் பண்ணை வீடு இந்திய தேசிய லோக் தளம் (INLD) தலைவர் அபய் சவுதாலாவுக்குச் சொந்தமானதாகும்.

தன்கர் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதியே தனக்குரிய அரசு இல்லத்தை ஒதுக்கக் கோரி மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.

முன்னாள் குடியரசு துணைத் தலைவருக்கான சலுகைகள்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பதவி ஓய்வுபெற்ற ஒரு குடியரசு துணைத் தலைவருக்குப் பின்வரும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும்:

• ஓய்வூதியம் மாதம் சுமார் 2 லட்சம் ரூபாய்.

• தங்குமிடம்: டெல்லியில் 'Type VIII' ரக பங்களா (மிகப்பெரிய அளவிலான வீடு).

• உதவியாளர்கள்: ஒரு தனிச் செயலாளர், ஒரு கூடுதல் தனிச் செயலாளர், ஒரு தனி உதவியாளர்.

• மருத்துவ வசதி: ஒரு மருத்துவர் மற்றும் ஒரு செவிலியர்.

• பணியாளர்கள்: நான்கு உதவியாளர்கள்.

முன்னாள் குடியரசு துணைத் தலைவர் காலமானால், அவரது கணவர் அல்லது மனைவிக்கு 'Type VII' ரக சிறிய வீடு ஒதுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.