காஜியாபாத்தில் போலி தூதரகம் நடத்தி மோசடி செய்த ஹர்ஷ் வர்தன் ஜெயின் கைது. வெஸ்ட் ஆர்க்டிகா, சபோர்கா உள்ளிட்ட கற்பனை நாடுகளின் தூதராக வேடமிட்டு பலரிடம் பணம் பறிப்பு.

உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாத்தில் ஒரு வாடகை பங்களாவில் போலியான தூதரகம் நடத்தி வந்த ஹர்ஷ் வர்தன் ஜெயின் என்ற நபர், சிறப்பு அதிரடிப்படையினரால் (STF) நேற்று (ஜூலை 22) கைது செய்யப்பட்டார். 'வெஸ்ட் ஆர்க்டிகா' என்ற இல்லாத நாட்டிற்கான தூதராக அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கவி நகர் பகுதியில் உள்ள ஒரு பங்களாவில் இயங்கி வந்த இந்த போலி தூதரகத்தில், ஹர்ஷ் வர்தன் ஜெயின் தன்னை 'வெஸ்ட் ஆர்க்டிகா' நாட்டின் தூதர் என்று கூறிக்கொண்டு செயல்பட்டு வந்துள்ளார். 'வெஸ்ட் ஆர்க்டிகா' மட்டுமன்றி, 'சபோர்கா', 'பௌல்வியா' மற்றும் 'லோடோனியா' போன்ற கற்பனையான நாடுகளின் தூதராகவும் அவர் வேடமிட்டிருப்பது தெரியவந்துள்ளது. தான் ஒரு முக்கிய பிரமுகர் என்று காட்டுவதற்காக, போலியான தூதரகப் பதிவு எண்கள் கொண்ட சொகுசு கார்களையும் அவர் பயன்படுத்தி வந்துள்ளார்.

Scroll to load tweet…

மோசடி பின்னணி

ஹர்ஷ் வர்தன் ஜெயின், வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகள் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் வழங்குவதாக பலரிடம் இருந்து பெரும் தொகையை பெற்று மோசடி செய்துள்ளார். இந்த மோசடிக்காக, அவர் 'ஹவாலா' முறையிலான சட்டவிரோத பணப் பரிமாற்ற வலைப்பின்னலையும் நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

இந்த போலி நாடுகளின் பெயரில், போலியான ஆவணங்கள், அடையாள அட்டைகள் மற்றும் பாஸ்போர்ட்டுகளையும் அவர் வழங்கியுள்ளார். மேலும், இந்திய வெளியுறவுத் துறையின் போலியான முத்திரைகளைக் கொண்ட ஆவணங்களையும் அவர் தயாரித்துள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்

சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய சோதனையில், ஹர்ஷ் வர்தன் ஜெயினிடம் இருந்து பின்வரும் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

  • போலியான தூதரக பதிவு எண்கள் கொண்ட 4 சொகுசு கார்கள்
  • போலியான நாடுகளால் வழங்கப்பட்ட 12 தூதரக பாஸ்போர்ட்டுகள்
  • பல்வேறு நாடுகள் மற்றும் நிறுவனங்களின் 34 ரப்பர் ஸ்டாம்புகள்
  • அரசு முத்திரைகள் கொண்ட போலியான ஆவணங்கள்
  • போலியான 2 பான் கார்டுகள் மற்றும் 2 பத்திரிகையாளர் அடையாள அட்டைகள்
  • ரூ. 44.7 லட்சம் ரொக்கப் பணம்
  • பல்வேறு வெளிநாடுகளின் பணம்
  • நிறுவன ஆவணங்கள் மற்றும் வர்த்தகம் தொடர்பான ஆவணங்கள்

இந்த பொருட்கள் அனைத்தும் மக்களை ஏமாற்ற பயன்படுத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஹர்ஷ் வர்தன் ஜெயினின் பின்னணி

இது ஹர்ஷ் வர்தன் ஜெயின் மீது எடுக்கப்படும் முதல் நடவடிக்கை அல்ல என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2011-ஆம் ஆண்டில், சட்டவிரோத செயற்கைக்கோள் தொலைபேசி வைத்திருந்ததற்காக அவர் கைது செய்யப்பட்டார். சர்ச்சைக்குரிய சாமியார் சந்திரசுவாமி மற்றும் சர்வதேச ஆயுத வியாபாரி அட்னான் காஷோகி ஆகியோருடன் அவருக்கு தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த மோசடி தொடர்பாக கவி நகர் காவல் நிலையத்தில் புதிய முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் தற்போது ஹர்ஷ் வர்தன் ஜெயினுக்குத் தொடர்புள்ள நெட்வொர்க்கை முழுமையாகக் கண்டுபிடிக்கும் விசாரணை தொடர்கிறது. இந்த மோசடியில் மேலும் பலருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் பலர் கைது செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.