என்னை நிம்மதியாக வாழ விடுங்கள்... ஜெ.தீபா பாணியில் அரசியலுக்கு குமாரசாமி முழுக்கு..!
இனியும் அரசியலில் தொடர விரும்பவில்லை, மக்கள் மனதில் இடம் கிடைத்தால் போதும் என கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி அதிரடியாக கூறியுள்ளார்.
இனியும் அரசியலில் தொடர விரும்பவில்லை, மக்கள் மனதில் இடம் கிடைத்தால் போதும் என கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி அதிரடியாக கூறியுள்ளார்.
கர்நாடகாவில், குமாரசாமி தலைமையில், மதச்சார்பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி, கடந்த 14 மாதங்களாக நடைபெற்று வந்தது. இம்மாத தொடக்கத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த, 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதனால் கூட்டணி அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து, குமாரசாமி மீது நம்பிக்கை வாக்கெடுப்பில் கொண்டு வரப்பட்டது. வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் ஆதரவாக 99 உறுப்பினர்களும், எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தோல்வியை அடுத்து புதிய முதல்வராக எடியூரப்பா பொறுப்பேற்று கொண்டார்.
இதனையடுத்து, கடும் மனஉளைச்சலில் இருந்து வந்த குமாரசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறுகையில் அரசியலை விட்டு விலகுவது தொடர்பாக ஆலோசித்து வருவதாக கூறினார். எதிர்பாராத விதமாக அரசியலுக்கு வந்த நான் எதிர்பாராத விதமாக முதல்வர் ஆனேன். இரண்டு முறை முதல்வர் ஆவதற்கு கடவுள் எனக்கு வாய்ப்பு வழங்கினார். யாரையும் திருப்திபடுத்த வேண்டிய அவசியமில்லை, மாநில வளர்ச்சிக்காக 14 மாதங்கள் நன்றாக உழைத்தேன் என கூறினார்.
என்னை அமைதியாகவும், நிமத்தியாகவும் வாழ விடுங்கள் என முன்னாள் முதல்வர் குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இனியும் அரசியலில் தொடர விரும்பவில்லை. மக்கள் மனதில் ஒரு இடம் கிடைத்தால் போதும் என வேதனையுடன் தெரிவித்தார். அரசியல் வாழ்வில் என்னால் யாரையும் திருப்திபடுத்த முடியவில்லை எனவும் குமாரசாமி உருக்கமாக தெரிவித்துள்ளார். இன்றை அரசியல் எதை நோக்கி செல்கிறது என்பதை கவனித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.