மத்திய அரசு 1000, 500 ரூபாய் நோட்டுக்களை தடை செய்ததை புகழந்து பேசிய முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி என்.சந்தோஷ் ஹெக்டே, “வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்கள் கருப்பு பணத்தை அரசு மீட்டு வர வேண்டும், அரசியல் கட்சிகள் ரொக்கமாக நன்கொடை பெறுவதையும் தடை செய்ய வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாக பதவி வகித்தவர் என். சந்தோஷ் ஹெக்டே. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராகவும், கர்நாடக மாநில அரசின் லோக் ஆயுத்தா அமைப்பின் தலைவராகவும்சந்தோஷ் ஹெக்டே பணியாற்றியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டில் உள்ள 1000, 500 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததை முன்னாள் நீதிபதி ஹெக்டே வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:

மத்தியஅரசு 1000, 500 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்த முடிவை நான் வரவேற்கிறேன், ஏற்கிறேன். அரசின் ஒவ்வொரு கொள்கை முடிவும் மக்களுக்கு சிறிய அளவுக்கு, குறைந்த காலத்துக்கு மட்டுமே பாதிப்பை கொடுக்கும். அதற்காக, நாட்டின் பணப்புழக்கத்தில் கருப்புப்பணத்தை அனுமதிக்க முடியாது.

இந்த நேரத்தில் அரசிடம் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், மத்திய அரசு, இன்னும் முயற்சி எடுத்து, வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியிருக்கும் கருப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வர வேண்டும். இதுதான் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் வாக்குறுதியாகவும் இருந்தது.

1000, 500 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்தது, மிகவும் முக்கியமான விஷயமாகும். ஏனென்றால், இந்த ரூபத்தில்தான் வெளிநாடுகளில் கருப்பு பணம் பாதுகாப்பாக பதுக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய அளவிலான கருப்புப் பணம் நாட்டுக்கு வெளியே இருக்கிறது. இது இந்தியாவில் உள்ள பணத்துக்கு ஈடாகவோ, அல்லது அதிகமாகவோ இருக்கும்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளை கடுமையாகப் பாதிக்கும். குறிப்பாக உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் உள்ள கட்சிகள் நன்கொடை வசூல் செய்வதை தடை செய்ய வேண்டும். அவ்வாறு நன்கொடை கொடுப்பவர்களின் பான் எண் அல்லது ஆதார் எண்ணையும் குறிப்பிட வேண்டும்.

அதன்மூலம் வருமான வரித்துறை மூலம் ஆய்வு செய்து, அந்த நபர் நன்கொடை கொடுத்தது, நியாயமான வருமானத்தில்தானா? என்பதை உறுதி செய்ய வேண்டும். இது உண்மையில் கடினமான நடவடிக்கை என்பதால், போலியான பெயர்களை கொடுத்து, நன்கொடை அளிக்க முடியாது. இந்த நடவடிக்கைகள் மூலம் கருப்புப்பணத்தை தடை செய்ய முடியும்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.