இ-வாலட்’ வைத்திருக்கிறீர்களா?...ரிசர்வ் வங்கி புதிய உத்தரவை படிங்க மறக்காதீங்க…

நாட்டில் டிஜிட்டல் பேமெண்ட்டை ஊக்கப்படுத்தும் வகையில், பி.பி.ஐ. எனச் செல்லப்படும் இ-வாலட்டில் பணம் வைத்துக்கொள்ளும் அளவை ரூ.20 ஆயிரமாக உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு 50 நாட்கள் நேற்றுமுன்தினத்தோடு முடிந்தநிலையில், பல புதிய அறிவிப்புகள் ரிசர்வ் வங்கி அறிவித்து வருகிறது.

ஏ.டி.எம்.களில் இருந்து நாள் ஒன்றுக்கு பணம் எடுக்கும் அளவை ரூ.2,500 லிருந்துரூ.4,500 ஆக உயர்த்தியது. இந்நிலையில் டிஜிட்டல் பரிமாற்றத்தை மக்களிடையே ஊக்கப்படுத்தும் வகையில், இ-வாலட்டில் தனிநபர் ஒருவர் பணம் இருப்பு வைக்கும் அளவை அதிகரித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-

நாட்டில் டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்கப்படுத்தும் வகையில், வங்கிகளின் பி.பி.ஐ. எனச் சொல்லப்படும் இ-வாலட்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்,செயல்பாடுகளை முழுமையாக ஆய்வுசெய்தோம். இதையடுத்து, தனிநபர் ஒருவர் இ-வாலட்களில் பணம் சேமித்து இருக்கும் அளவை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்துகிறோம்.

இதில் வர்த்தகர்கள் ரூ.20 ஆயிரம் வரை சேமிப்பாக இ-வாலட்டில் வைக்க முடியும்.அதேசமயம், வங்கிக்கணக்கோடு இணைக்கப்பட்ட இ-வாலட்கள் மூலம், மாதத்துக்கு ரூ.50 ஆயிரம் வரை வைக்கலாம். மற்றொரு வங்கிக்கணக்குக்கு பணம் அனுப்புவதிலும் கட்டுப்பாடுகள் இல்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது வங்கி இல்லாத 47 நிறுவனங்களும், 45 வங்கிகளும் இ-வாலட்களை செயல்படுத்தி வருகின்றன.