Asianet News TamilAsianet News Tamil

கர்நாடகாவில் 1,832 சிறப்பு வாக்குச் சாவடிகளை அமைக்கும் தேர்தல் ஆணையம்!

கர்நாடக மாநிலத்தில் 1,832 சிறப்பு வாக்குச் சாவடிகளை அமைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது

Election commission to establish over 1800 Special Polling Booths In Karnataka smp
Author
First Published Apr 25, 2024, 3:32 PM IST

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 109 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி முடிந்த நிலையில், 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 26ஆம் தேதி (நாளை) நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டில் அண்டை மாநிலங்களான கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும், மொத்தம் 28 தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநிலத்தில் உள்ள 14 தொகுதிகளுக்கு முதற்கட்டமாகவும் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் 1,832 சிறப்பு வாக்குச் சாவடிகளை அமைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. பழங்குடியினர், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் கர்நாடகாவில் இந்த சிறப்பு வாக்குச் சாவடிகளை அமைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

பழங்குடியினர் கலாச்சாரத்தை மையமாக வைத்து 40 சிறப்பு வாக்குச் சாவடிகளை பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் துறை, தேர்தல் ஆணையத்தின் ஒருங்கிணைப்புடன் அமைத்து வருகிறது. பழங்குடியினர் தீம் அடிப்படையிலான இந்த வாக்குச் சாவடிகள் சாமராஜநகர் (9), மைசூரு (9), தட்சிண கன்னடா (5), ஷிவமொக்கா (3), உடுப்பி (1), ஹாசன் (1), உத்தர கன்னடா (5), குடகு (5) மற்றும் சிக்கமகளூரு (2) ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், மாநிலம் முழுவதும் இளைஞர்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மக்களவைத் தேர்தல் திருவிழா போல் கொண்டாடப்படும் என கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் மீனா தெரிவித்துள்ளார். வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்க சிறப்புச் சாவடிகள் நிறுவப்பட்டு வருகின்றன. பெண் வாக்காளர்களை ஊக்குவிக்க, மாநிலம் முழுவதும் 1,120 ப்ரத்யேகமாக வாக்குச் சாவடிகள் நிறுவப்பட்டு, அவை முழுமையாக பெண்களால் நிர்வகிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் குறைந்தபட்சம் ஐந்து வாக்குச் சாவடிகள் பெண்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வெறுப்பு பேச்சு: விளக்கம் கேட்கும் தேர்தல் ஆணையம்!

அதேபோல், மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்பதை உறுதிசெய்ய ஒரு வாக்குச் சாவடி அமைக்கப்படும் எனவும், இந்த 224 சாவடிகளும் சிறப்புத் திறன் கொண்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களால் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒரு வாக்குச் சாவடி முழுமையாக இளம் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களால் நிர்வகிக்கப்படும். ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம் ஒரு வாக்குச் சாவடியாவது அந்த பிராந்தியத்தின் கலாசாரம் மற்றும் சிறப்பைப் பிரதிபலிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் அமைக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios