கடந்த நவம்பர் 8ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. அதேவேளையில் கையில் இருப்பு உள்ள பணத்தை , வங்கியில் உள்ள தங்களது கணக்கில் செலுத்தி, வேறு பணத்தை பெற்று கொள்ளலாம் என தெரிவித்தது. மேலும் புதிய 2000 ரூபாய் நோட்டையும் வெளியிட்டது.
ஆனால், 2000 ரூபாய் நோட்டுகள் போதிய அளவு கிடைக்கவில்லை. இதைதொடர்ந்து 500 ரூபாய் நோட்டுகளும் வெளியிடப்பட்டன. அவையும் மக்களின் கைக்கு சென்றடையவில்லை. இதனால், பணம் எடுப்பதற்காக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களுக்கு அதிகாலை முதல் படையெடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில், பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சில்லறை தட்டுப்பாட்டை போக்க 10 ரூபாய் நாணயங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இதைதொடர்ந்து பெரும்பாலான வங்கிகளில் 1000 முதல் 3000 ஆயிரம் வரை பணம் எடுப்பவர்களுக்கு, 10 ரூபாய் நாணயங்களை, 1000 ரூபாய்க்கு ஒரு கவரில் போட்டு கொடுக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களா கடைகளில் 10 ரூபாய் நாணயங்களை, வியாபாரிகள் வாங்க மறுக்கின்றனர். போலி நாணயம் வெளியே வந்துள்ளதாகவும் கூறுகின்றனர். அதேபோல் அரசு பஸ்சில் பயணம் செய்தால், கண்டக்டர்கள் வாங்குவதே இல்லை.
ஒரு நேரத்தில் சில்லறை இல்லாவிட்டால், கீழே இறக்கிவிடும் அவர்கள், 100 ரூபாய் கொடுத்தாலும் சில்லறை தருகிறேன். 10 ரூபாய் நாணயம் வேண்டாம் என கூறுகின்றனர். இதனால், 10 ரூபாய் நாணயங்களை வைத்து கொண்டு பொதுமக்கள் புலம்பி தவிக்கின்றனர். ஆனால், வங்கிகளில் 10 ரூபாய் நாணயங்கள் அதிகளவில் கிடைக்கிறது.
இதுகுறித்து, ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “10 ரூபாய் நாணயங்கள் தாராளமாக செலவு செய்யலாம். அதில் எந்த மாற்றமும் இல்லை. போலி நாணயங்கள் வந்ததாக எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. 10 ரூபாய் நாணயம் கடந்த 2009ம் ஆண்டு ரிசர்வ் வங்கி மூலம் வெளியிடப்பட்டது.
அந்த நாணயம், இரு உலோகத்தால் வட்ட வடிவில் உருவாக்கப்பட்டவை. 27 மி.மீ. விட்டம். 7.74 கிராம் எடை கொண்டவை. அவ்வப்போது சில மாற்றங்களை மட்டும் கொண்டு வருகிறது. இதனால், 10 ரூபாய் நாணயம் செல்லாது என சிலர் வதந்திகளை பரப்பு வருகின்றனர். இதனை யாரும் நம்ப வேண்டாம்” என்றார்.
