குழந்தைகளுக்கு கொரோனா அதிக பாதிப்புக்களை ஏற்படுத்துமா?... எய்ம்ஸ் இயக்குநர் கொடுத்த விளக்கம்...!
2வது அலையில் குழந்தைகள் மத்தியில் சிறிய அளவிலான தாக்கத்தையே ஏற்படுத்தியது. வரும் காலத்திலும் குழந்தைகள் மத்தியில் கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தாது எனக்கூறினார்.
இந்தியாவில் கோரதாண்டவம் ஆடி வந்த கொரோனா தொற்றின் தாக்கம் கடந்த சில நாட்களாகவே படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. 66 நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரி எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் குறைவாக கடந்த 24 மணி நேரத்தில் 86,498 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர், 2,123 உயிரிழந்தனர். இதேபோல தமிழகத்திலும் பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1 லட்சத்து 82 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 13 லட்சம் பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில் எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலோரியா டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: கொரோனா இரண்டாவது அலை தான் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, அதிக உயிரிழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், 2வது அலையில் குழந்தைகள் மத்தியில் சிறிய அளவிலான தாக்கத்தையே ஏற்படுத்தியது. வரும் காலத்திலும் குழந்தைகள் மத்தியில் கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தாது எனக்கூறினார்.
நாட்டில் ஏற்பட்ட இரு கொரோனா அலைகளிலிருந்தும் சேகரிப்பட்ட தகவல்களில் குழந்தைகளுக்கு எவ்வித கடுமையான பாதிப்புகளும் ஏற்படவில்லை என்றும், இந்தியாவில் சேகரிக்கப்பட்ட எந்த தகவலிலும் குழந்தைகள் அதிகம் பாதிக்கபட்டுள்ளதற்கான எந்த தரவுகளும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 60-70 சதவிகித குழந்தைகள் இணை நோயுற்றவர்களாகவும், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு அல்லது கீமோதெரபியில் இருந்தவர்கள் என்றும், ஆரோக்கியமான குழந்தைகளுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே தென்பட்டதாகவும், அவர்கள் மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு பூரண நலமடைந்ததாகவும் கூறினார்.