ரூபாவுக்கு நோட்டீஸ்...!!! - செய்தியாளர்களை சந்தித்ததால் அதிரடி...
கர்நாடக முதலமைச்சர் சீதாராமையாவின் உத்தரவை மீறி டிஐஜி ரூபா செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்ததால் அவருக்கு அம்மாநில அரசின் சார்பில் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூர் பரப்பன அக்ரஹாரம் சிறையில் உள்ள சசிகலாவிற்கு சொகுசு வாழ்க்கை வாழ்வதாகவும் அதற்கு சிறைத்துறை அதிகாரிகள் 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளதாகவும் ரூபா சிறைத்துறை டிஐஜிக்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவித்திருந்தார். இது குறித்து மீடியாக்களுக்கும் பேட்டியளித்திருந்தார்.
இதனிடையில் டிஐஜி ரூபா கொடுத்துள்ள அறிக்கைகள் உண்மைக்கு புறம்பாக உள்ளதாகவும் இது போன்ற சம்பவங்கள் நடக்கவே இல்லை என்று சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணராவ் தெரிவித்திருந்தார்.
இதனிடையில் இது குறித்து லஞ்சம் வாங்கியதாக கூறப்படுவது குறித்தும் டிஐஜி ரூபாவின் அறிக்கை குறித்து விரிவான விசாரணை நடத்த முதலமைச்சர் சீதாராமையா உத்தரவிட்டார். இதற்காக தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று திடீரென டிஐஜி ரூபா நிருபர்களை சந்தித்தார். அப்போது சசிக்கலாவிற்கு சிறையில் அளிக்கப்படும் சலுகைகள் குறித்த அறிக்கையில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் சசிக்கலா விஷயத்தில் என்மீதும் நான் தாக்கல் செய்துள்ள அறிக்கை குறித்தும் தவறு இருந்தால் விசாரணைக்கு தயாராக இருப்பதாக கூறினார்.
சசிக்கலா விவகாரத்தில் சிறையில் என்ன நடக்கிறதோ அந்த உண்மையை தான் அறிக்கையில் கூறியுள்ளேன் என்றும் இந்த பிரச்சணையில் என்னை குறிவைப்பது நியாமற்றது என்று தெரிவித்தார்.
சிறையில் சசிக்கலாவின் அறையில் டிவி மின்விசிறி குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் எனக்கு உறவுக்காரரோ எதிரியோ இல்லை என்றும் அவர் மீது குற்றம் சுமர்த்தினால் எனக்கு என்ன லாபம் கிடைக்கப்போகிறது என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டார்.
சிறைத்துறையில் நடக்கும் உண்மை நிலையை வெளிப்படுத்தியதால் உயர் அதிகாரிகள் எனக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள் என்றும் ரூபா கூறினார்.
முதலமைச்சர் இப்பிரச்சணை குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள போது டிஐஜி ரூபா செய்தியாளர்களை சந்தித்தது குறித்து மாநில அரசு சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.