கொடூரத்தின் உச்சம்... ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மருத்துவர் உட்பட 8 பேர் துடிதுடித்து உயிரிழப்பு...!
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் தான் கொரோனா நோயாளிகள் ஆக்ஸிஜன் கிடைக்காமல் மரணிக்கும் அவலங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா 2வது அலையின் வேகம் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,01,993 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. முதல் அலையை விட இரண்டாவது அலையால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 523 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாட்டில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 853 ஆக உயர்ந்துள்ளது.
இப்படி நாள்தோறும் அதிகரிக்கும் கொரோனா தொற்றால் பல்வேறு மாநிலங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் மரணிக்கும் நிலை ஏற்படுகிறது.ஆக்ஸிஜன் கிடைக்காமல் மூச்சு திணறும் இந்தியாவுக்கு உலக நாடுகள் பலவும் உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளன. இந்தியாவிற்கு உதவ சீனா, பாகிஸ்தான், ஈரான், அமெரிக்கா, சவுதி அரேபியா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் விமானம் மற்றும் கப்பல் வழியாக ஆக்ஸிஜன், மருந்துப் பொருட்கள் ஆகியவற்றை வழங்க முன்வந்துள்ளன.
இதனிடையே இந்தியாவின் தலைநகரான டெல்லியில் தான் கொரோனா நோயாளிகள் ஆக்ஸிஜன் கிடைக்காமல் மரணிக்கும் அவலங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. டெல்லியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்பது நீடித்து வருகிறது. பத்ரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் உட்பட 8 கொரோனா நோயாளிகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மருத்துவமனைக்கு வர வேண்டிய ஆக்ஸிஜன் டேங்கர் வர ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டதால் நோயாளிகளுக்கான ஆக்ஸிஜன் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த அதே மருத்துவமனைச் சேர்ந்த மருத்துவர் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர்.