தலைநகரில் சர்ச்சை.. கொரோனா உயிரிழப்பில் முரண்பட்ட தகவல்கள்..! உண்மையான உயிரிழப்பு எவ்வளவு?
டெல்லியில் கொரோனா உயிரிழப்பு குறித்த மாநகராட்சி நிர்வாகம் வழங்கிய தகவல், மாநில அரசு தெரிவித்த தகவலிலிருந்து முரண்பட்டிருப்பதால், பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 2 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒரு லட்சத்து 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 8115 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவை பொறுத்தமட்டில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மூன்று மாநிலங்களில் தான் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. அதிகமான உயிரிழப்புகளும் மகாராஷ்டிராவில் தான் நிகழ்ந்துள்ளன. மகாராஷ்டிராவில் கொரோனாவிற்கு 3438 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இரண்டாமிடத்தில் உள்ள தமிழ்நாட்டில் 326 பேர் உயிரிழந்துள்ள நிலையில், டெல்லியில் 984 பேர் உயிரிழந்திருப்பதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், இன்று செய்தியாளர்களை சந்தித்த டெல்லி மாநகராட்சி அதிகாரிகள், டெல்லியில் இதுவரை 2098 சடலங்கள், கொரோனா வழிமுறைகளை பின்பற்றி அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். தெற்கு டெல்லியில் 1080 சடலங்களும், வடக்கு டெல்லியில் 976 சடலங்களும், கிழக்கு டெல்லியில் 42 சடலங்களும் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி அடக்கம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.
டெல்லியில் 984 பேர் தான் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக டெல்லி மாநில அரசு தெரிவித்திருந்த நிலையில், 2098 சடலங்கள் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி அடக்கம் செய்யப்பட்டிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவல் சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து டெல்லி மாநில ஆம் ஆத்மி அரசு தான் விளக்கமளிக்க வேண்டும். விரைவில் இந்த முரண்பாடு குறித்து அரசு தரப்பில் விளக்கமளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.