டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் குண்டு வெடித்ததில் 8 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடர் குண்டு வெடிப்பில் மேலும் பல கார்கள் தீப்பற்றி எரிந்தது.

டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நுழைவு வாயில் 1 அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் குண்டு வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சில நொடிகளில், அருகிலிருந்த மற்றொரு காரும் வெடித்துள்ளது. இதனையடுத்து அருகில் இருந்த மேலும் 4 கார்களில் தீப்பிடித்து மளமளவென தீப்பற்றி எரிந்தன. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 7 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த குண்டு வெடிப்பை அடுத்து காவல் உயரதிகாரிகள், NIA அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தலைநகர் டெல்லியில் கார் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, டெல்லி முழுவதும் உச்சகட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு முன்னதாக டெல்லி அருகே 350 கிலோ வெடி மருந்துகள், ஏகே 47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்டவைகளை ஜம்மு காஷ்மீர் போலீசாரால் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.