டெல்லி விமானநிலையத்தை கதிகலங்க வைத்த பெட்டி: 24 மணிநேர கண்காணிப்புக்குப்பின் உள்ளே இருந்தது என்ன தெரியுமா?
டெல்லி விமான நிலையத்தில் நேற்று சந்தேகத்திற்கிடமான வகையில் கண்டெடுக்கப்பட்ட பையில் ஆர்டிஎக்ஸ் வெடிபொருள் இருக்கலாம் என மோப்பநாய் கண்டுபிடிக்க, 24 மணிநேர தீவிர கண்காணிப்பு, குளிர்சாதன பெட்டியில் வைத்து பாதுகாப்புடன் திறக்கப்பட்டபோது அதில் இருந்ததைக் கண்டு பாதுகாவலர்கள் அதிச்சி அடைந்துவிட்டனர்
அந்த பெட்டியில் இருந்தது தீபாவளி பலகாரங்கள், முந்திரிப்பருப்பு, சாக்லேட் போன்றவை இருந்தது என்று தெரியவந்தது.
புதுடெல்லி சர்வதேச விமான நிலையத்தில் டெர்மினல் 3'யில் நேற்று அதிகாலை 1 மணியளவில் பயணிகள் வருகை வாயில் எண் 2 இல் பை ஒன்று கிடந்ததை சிஎஸ்ஐஎப் காவலர்கள் கண்டுபிடித்தனர். இதனால் இரண்டு மணிநேரங்களுக்கு பயணிகள் நடமாட்டம் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஒட்டுமொத்த விமான நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பயணிகளிடம் கடும் சோதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் சந்தேகத்துக்குரிய அந்த பை சிஐஎஸ்எஃப் காவலர்கள் உதவியுடன் அகற்றப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. அதை உடனடியாக திறந்து பார்க்காமல் 24 நேர கண்காணிப்பில் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைக்கப்பட்டது.
மோப்ப நாய்களும் பையில் சக்திவாய்ந்த வெடிபொருள் இருக்கக் கூடும் என்று சுட்டிக்காட்டியது. அதைத் தொடர்ந்து பையில் உள்ள ஆபத்தின் தன்மையைக் கண்டறிய சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் இன்று காலை திறந்தபோதுதான் அந்த பையில் தீபாவளிப் பலகாரங்கள் இருந்தது கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து சிஐஎஸ்எப் செய்தித் தொடர்பாளர் ஹேமிந்திரா சிங் கூறியதாவது:
நேற்று நடந்த சம்பவத்தில் எந்தவித ஆபத்துமில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. உரிமையாளரை அடையாளம் காண சி.சி.டி.வி காட்சிகள் சரிபார்க்கப்பட்டன. 24 மணி நேரத்திற்கு அந்தப் பையை நிபுணர்க்குழு ஆய்வு செய்ததில் அதில் சாக்லேட், முந்திரி மற்றும் தீபாவளி பலகாரங்கள் இருப்பதைக் கண்டனர்.
பையின் உரிமையாளரும் வந்து தனது தீபாவளி பலகாரங்கள் உள்ளிட்ட இன்னபிற பொருட்கள் கொண்டுவந்த பையைக் காணவில்லை என விமான நிலைய போலீஸாரிடம் புகார் அளித்தார். அவர் பையைத் தவறவிட்டதோடு அவசரமாக சென்றுவிட்டதால் அடுத்த இரண்டு மணிநேரத்தில் விமான நிலையத்தில் அனைத்து விஷங்களும் பிரச்சினைக்குள்ளாகிவிட்டது.
இவ்வாறு ஹேமிந்திரா சிங் தெரிவித்தார்.