35 பந்து... 100 ரன்... குறைந்த பந்தில் செஞ்சுரி அடித்து மில்லர் உலக சாதனை!
மிகக் குறைந்த பந்துகளில் செஞ்சுரி அடித்து உலக சாதனை படைத்துள்ளார் தென்னாப்பிரிக்க அணியின் மில்லர். அவர் 35 பந்துகளில் அதிவேக சதத்தை எட்டினார்.
வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் மில்லர்தான் இந்த சாதனையை நிகழ்த்தியது. இந்தப் போட்டியில் 83 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர் 225 என்ற பெரிய இலக்குடன் விளையாடிய வங்க தேச அணி, 18.3 ஓவரில் 141 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 83ன்ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
தென்னாப்பிரிக்க அணியின் வீரர் அசிம் ஆம்லா 70 பந்துகளில் 85 ரன் எடுத்தார். பின்னர் 5ஆவதாகக் களமிறங்கிய மில்லர், 23 பந்துகளில் அரை சதம் கடந்தார். பின் தொடர்ச்சியாக சிக்ஸர் மழை பொழிந்து 35 பந்துகளில் சதமெடுத்து உலக சாதனை படைத்தார்.
18-வது ஓவர் தொடங்கும்போது மில்லர் அரை சதம் கூட எடுத்திருக்கவில்லை. முகமது சைஃபுதின் வீசிய 19ஆவது ஓவரில் முதல் ஐந்து பந்துகளையும் சிக்ஸருக்கு விரட்டிய மில்லர், கடைசிப் பந்தில் ஒரு ரன் எடுத்தார். தொடர்ந்து 20ஆவது ஓவரின் முடிவில் 101 ரன்கள் எடுத்து அசத்தினார் மில்லர். ரன் ஏதும் எடுக்காத நிலையில் வங்கதேச விக்கெட் கீப்பர், மில்லர் அளித்த கேட்ச்சைத் தவறவிட்டதில், தப்பிய மில்லர் சாதனைக்குச் சொந்தக்காரராகி விட்டார்.
இதற்கு முன் தென்னாப்பிரிக்க வீரர் லெவி 45 பந்துகளில் சதமெடுத்து சாதனை படைத்திருந்தார். அவரது சாதனையை பத்து பந்துகள் குறைவான இடைவெளியில் மில்லர் முறியடித்தார். அதிவேக டி20 சதங்களில் முதல் மூன்று இடங்களில் தென்னாப்பிரிக்க வீரர்களே உள்ளனர்.
இருப்பினும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, டி20 கிரிக்கெட் போட்டிகளில், புணே அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 30 பந்துகளில் கெயில் சதமெடுத்து அதிவேக சத சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் சைமண்ட்ஸ், 2004இல் உள்ளூர் போட்டி ஒன்றில் 34 பந்துகளில் சதமெடுத்து 2ஆம் இடத்தில் உள்ளார்.