டார்ஜிலிங் இக்கட்டான நிலையில் இருப்பதற்கு காரணம் பாஜக தான்! மம்தா அதிரடி குற்றச்சாட்டு…
டார்ஜிலிங்கில் விரைவில் அங்கு அமைதி திரும்பும் என்றும் டார்ஜிலிங் இக்கட்டான நிலையில் இருப்பதற்கு பாஜக தான் காரணம் என்றும் மேற்கு வங்க டுதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.
மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் உள்ளிட்ட பகுதிகளை பிரித்து கூர்காலாந்து என்ற பெயரில் தனி மாநிலம் அமைக்கக்கோரி கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பினர் கடந்த மாதம் 12-ந்தேதி முதல் காலவரையற்ற முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், டார்ஜிலிங் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், கூர்காலாந்து இயக்க ஒத்துழைப்பு கமிட்டி சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது. முழு அடைப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்துவது என்றும், ஜூலை 15-ம்தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அனைத்து மேம்பாட்டு வாரியங்களின் தலைவர் மற்றும் துணைத் தலைவர்களும் 14-ம் தேதிக்குள் ராஜினாமா செய்ய காலக்கெடு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, போராட்டத்தின்போது போலீஸ் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக சி.பி.ஐ. விசரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் கூர்காலாந்து தனிமாநில கோரிக்கைகாக நடந்து வரும் போராட்டத்தால், டார்ஜிலிங் மலை பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. டார்ஜிலிங் இக்கட்டான நிலையில் இருப்பதற்கு பாஜக தான் காரணம் என மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.