ஒன்றரை கோடியைக் கடந்த ஒட்டுமொத்த பாதிப்பு... இன்று ஒரே நாளில் மட்டும் இத்தனை லட்சம் பேருக்கு தொற்று உறுதியா?
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 619 ஆக உள்ளது.
கொரோனா தொற்றின் 2வது அலை இந்தியாவை புரட்டிப் போட்டு வருகிறது. நாளோன்றுக்கு லட்சக்கணக்கில் அதிகரிக்கும் பாதிப்புகளும், கொத்து கொத்தாய் நிகழும் மரணங்களும் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளை மத்திய, மாநில அரசு துரிதப்படுத்தியிருக்கிறது. ஆனால் கொரோனா தடுப்பூசி பணிகளையே முந்தும் அளவிற்கு நாட்டில் நாளுக்கு நாள் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் புதிதாக 2 லட்சத்து 73 ஆயிரத்து 810 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 50 லட்சத்து 61 ஆயிரத்து 919 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 619 ஆக உள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் மொத்த எண்ணிக்க ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 769 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 1,29,53,821-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 19,29,329 பேர் சிகிசையில் இருக்கிறார்கள்.