இந்தியாவில் 308 பேர் பலி..! 9 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு..!
நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 1,985 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருகின்றனர். அதற்கடுத்தபடியாக டெல்லியில் 1,154 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
உலக அளவில் தனது கொடூரத்தை காட்டி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு இன்று 9 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பு இருப்பதாக 9,152 பேர் கண்டறியப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி 308 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. நேற்று பலியானவர்களின் எண்ணிக்கை 273 ஆக இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 1,985 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருகின்றனர். அதற்கடுத்தபடியாக டெல்லியில் 1,154 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் தற்போது மூன்றாவது இடத்தில் இருக்கிறது. நேற்று ஒரே நாளில் 106 பேருக்கு பாதிப்பு உறுதியாகி எண்ணிக்கை 1075ஐ எட்டியுள்ளது. 11 பேர் பலியாகி இருக்கின்றனர். ராஜஸ்தானில் 804 பேரும் மத்திய பிரதேசத்தில் 532 பேரும் குஜராத்தில் 516 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். மற்ற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர்களில் 827 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.
கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக தற்போது நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கு நாளையுடன் நிறைவடையும் நிலையில் அதை மேலும் நீட்டிக்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன். ஏற்கனவே ஒடிசா, பஞ்சாப், மஹாராஸ்டிரா, தெலுங்கானா, மேற்கு வங்கம் என பல மாநிலங்களில் இம்மாத இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து அதற்கான அறிவிப்பை இன்று அல்லது நாளை வெளியிடக்கூடும். ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்ட போதும் தற்போதைய கட்டுப்பாடுகளை விட அதில் பல மாற்றங்கள் இருக்கக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.