Comrades to target Modi corporate friends
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் இன்றும், நாளையும் (ஜூன் 7, 8) கோவை சிரியன் சாலையிலுள்ள ஜீவா இல்லத்தில் நடைபெறுகிறது. மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் டி.ராஜா, தா.பாண்டியன், சி.மகேந்திரன், திருப்பூர் சுப்பராயன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அத்தனை பேரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்று காலையில் வழக்கமான நடைமுறைகளுடன் துவக்கப்பட்டது முதல் நாள் கூட்டம். பொதுவாக சென்னையில் நடத்தப்படும் இந்த கூட்டம் இந்த முறை கோவையில் நடத்தப்படுகிறது.
இதனால் மீடியாக்கள் அதீத கவனமெடுத்தும் ஸ்மெல் செய்ய முயல, ’ஒண்ணும் பெரிதா இல்லை தோழர். எங்களோட இயக்க செயல்பாடுகள் பற்றி அதிகமா கலந்தாலோசிக்க இருக்கிறோம். அது போக நடப்பு அரசியலையும் விவாதிப்போம். அவ்ளோதான்.’ என்று சொல்லி மீடியாக்களை நகர்த்திவிட்டு கூட்டம் நடத்துகிறார்களாம்.
மாநில அரசியலை லேசாக விமர்சித்துவிட்டு மத்திய அரசை அதிகம் தாக்குவதாக இந்த கூட்டத்தின் இலக்கு இருக்கும் என்கிறார்கள். சுடச்சுட மாட்டுக்கறி அரசியல் பானையில் வெந்துகொண்டே இருப்பதால் அதை பதமாக பரிமாறுவதோடு, மோடியின் கார்ப்பரேட் நண்பர்களுக்கு சொந்தமான நிறுவனங்களின் முகத்திரையை கிழித்துக் காட்டும் தீர்மாணங்கள் சில இந்த கூட்டத்தின் வாயிலாக வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ’இவர்கள்தான் மோடியின் உற்ற நண்பர். இவர் தமிழகத்திற்கு செய்யும் தொந்தரவுகள் பாரீர் தோழர்களே!’ என்று மக்கள் மன்றத்தின் முன் வைப்பது போன்ற விஷயங்கள் ஆதாரத்துடன் வெளியாகலாமாம்.
நியூஸ் ஃபாஸ்ட் ஏற்கனவே சொல்லியிருந்தது போல் கொங்கு மண்டலத்தில் தாங்கள் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற்றெடுக்கவே இரு பெரும் கம்யூனிஸ்டுகளும் இங்கே மாநில நிகழ்வுகளை நடத்த துவங்கிவிட்டன. கடந்த வாரம் மார்க்சிஸ்ட் இங்கே முகாமிட்டது போல் இந்த வாரம் சி.பி.ஐ. கோவையில் முகாமிட்டிருக்கிறது.
இது தேர்தல் அரசியலுக்கு கைகொடுக்குமா?...பொறுத்திருந்து கவனிப்போம்.
