புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமனம்… குடியரசுத் தலைவர் உத்தரவு !!
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதுள்ள ஆணையர் ஓ.பி.ராவத்தின் பதவிக் காலம் வரும் 2 ஆம் தேதியுடன் முடிவடைவதால் புதிய தலைமைச் தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது தலைமைத் தேர்தல் ஆணையராக ஓ.பி.ராவத் பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதம் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையொட்டி புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோராவை குடியரசுத் தலைவர் ராமநாத் கோவிந்த் நியமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுனில் அரோரா, ராஜஸ்தான் மாநில கேடரில் நியமிக்கப்பட்ட 1980-ம் ஆண்டு பேட்ஜ் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். இவர், ராஜஸ்தான் முதலமைச்சரின் செயலாளராக இருந்திருக்கிறார். பிரசார் பாரதியின் ஆலோசகராகவும் இவர் இருந்திருக்கிறார்.இந்தியன் ஏர்லைன்ஸ் நஷ்டத்தில் இருந்தபோது, நிர்வாக இயக்குநராகத் திறம்படப் பணியாற்றியவர். இவர்மீது சர்ச்சைகளும் உண்டு. அதில் முதன்மையானது, நீரா ராடியா டேப்பில் இவரும் நீரா ராடியாவும் பேசுவது இடம் பெற்றிருந்தது.