ஜன.2 முதல் ஏ.டி.எம்.மில்போதுமான பணம் கிடைக்குமா?...பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி

ரூபாய் நோட்டு தடை முடிந்து 50 நாட்கள் முடிந்த நிலையில், மக்களுக்கு போதுமான பணம் ஏ.டி.எம்.களில் இருந்து கிடைக்குமா? என பிரதமர் மோடிக்கு முன்னாள் நிதிஅமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

தளர்த்தல்

ரூபாய் நோட்டு தடை அறிவிப்பைத் தொடர்ந்து, பிரதமர் மோடி கூறிய 50 நாட்கள்,அதாவது டிசம்பர் 30ந்தேதி முடிந்து இரு நாட்கள் கடந்த நிலையில் பணம் எடுக்கும் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி நீக்கவில்லை. மாறாக, ஏ.டி.எம்.களில்இருந்து பணம் எடுக்கும் அளவை ரூ.4500 ஆக உயர்த்தி, கட்டுப்பாடுகளை தளர்த்திரிசர்வ் வங்கி நேற்று உத்தரவிட்டது. 

ஏன் தொடர்கிறது?

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் டுவிட்டரில்வெளியிட்ட அறிக்கையில், “ டிசம்பர் 30-ந்தேதிக்கு பின் வங்கிகள், ஏ.டி.எம்.களில்இருந்தும் பணம் எடுக்கும் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். டிசம்பர் 30-ந்தேதி முடிந்துவிட்டது. கட்டுப்பாடுகள் ஏன் நீக்கப்படவில்லை?. பணம் எடுக்க மக்களுக்கு கட்டுப்பாடுகள் ஏன் தொடர்கிறது?.

முடியாது?

ஜனவரி 2-ந்தேதியில் இருந்து, அனைத்து ஏ.டி.எம்.களிலும் போதுமான பணம் கிடைக்குமா? மக்கள் தேவைக்கு பணம் எடுக்க முடியுமா? என்பதை பிரதமர் மோடி விளக்க வேண்டும். அவ்வாறு பணம் எடுக்க முடியாவிட்டால், ஏன் எடுக்க முடியாது?. என்பதையும் தெளிவு படுத்த வேண்டும்.

கருப்பு பணம் ஒழியுமா?

இனிவரும் நாட்களில் மருத்துவக் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும்நன்கொடைகள் வாங்காமல் இருப்பார்களா? அதன் மூலம் கருப்புபணம் உள்ளே வராமல் இருந்து விடுமா?. ஜனவரி 2-ந் தேதியில் இருந்து ஊழல்கள் நாட்டில் இருந்து ஒழிக்கப்பட்டு விடுமா? இந்த விஷயங்கள் எல்லாம் நடந்து விடுமா? என தெரிவித்துள்ளார்.

ரகசியத்தை வெளியிடுங்கள்...

ரிசர்வ் வங்கி கவர்னர் குறித்து ப.சிதம்பரம் வெளியிட்ட அறிக்கையில், “ ரூபாய் நோட்டு தடை அறிவிக்கப்பட்ட நவம்பர் 8-ந்தேதி அன்று ரிசர்வ் வங்கி உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்களை வெளிப்படையாக கவர்னர்உர்ஜித்ப டேல் வெளியிட வேண்டும்.

கடந்த 20 ஆண்டுகளாக பிமால் ஜலான், ஓய்.வி.ரெட்டி, டி. சுபா ராவ், ரகுராம் ராஜன்என பல ரிசர்வ் வங்கி கவர்னர்களாக இருந்துள்ளனர், ஆனால், ஒருவர் கூட பொருளாதார வளர்ச்சிக்காக ரூபாய் நோட்டு தடை அறிவிப்பை முன்மொழிந்தது இல்லை.

பொருளாதார வளர்ச்சிக்கு ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு முக்கியமானது என்ற ஆலோசனையை கவர்னர் உர்ஜித் படேலுக்கு யார் கொடுத்தது என்பதை தெரிவித்தால் அவருக்கு பரிசு அளிக்கிறேன். ரிசர்வ் வங்கியில் கடந்த 2½ ஆண்டுகளாக இயக்குநர்கள் இல்லாத நிலையில், 3 இயக்குநர்களை வைத்து கடந்த நவம்பர் 8-ந்தேதி கூட்டம் போடப்பட்டுள்ளது.

இந்த 3 பேரை வைத்து நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டம் மூலம் எப்படி ரூபாய் நோட்டு தடை முடிவை எடுத்தார்கள்? ஏறக்குறைய 3 மணிநேரத்தில் நடந்த கூட்டத்துக்கு பின் எடுக்கப்பட்ட முடிவைத் தொடர்ந்து அடுத்த அரை மணிநேரத்தில் பிரதமர் மோடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஆதலால், ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் கூட்டத்தில் என்ன ஆலோசிக்கப்பட்டது?, அமைச்சரவையில் என்ன விவரம் தெரிவிக்கப்பட்டது? குறித்து வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.