சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு வெறும் 30 நிமிடங்களில் போகலாம்; மும்பைக்கு ஒரு மணி நேரத்தில் போகலாம். இதெல்லாம்,வீடியோ கேம் விளையாட்டிலோ, கற்பனைக் கதைகளில்தான் சாத்தியம் என்று நினைக்க வேண்டாம். உண்மையில் நனவாகக் கூடியது தான்.
அமெரிக்காவைச் சேர்ந்த எலோன் மஸ்க் என்பவர் உருவாக்கிய ‘ஹைப்பர் லூப் ரெயில்’ மூலம் தான் இது சாத்தியம். இந்த ‘குழாய் வழி’ அதிவேக ரெயில் போக்குவரத்து அதிகபட்சமாக மணிக்கு 1200 கி.மீ வேகத்தை எட்ட முடியும்.
கான்க்ரீட் தூண்கள் அமைத்து, அதன் மீது இந்த குழாய்கள் பதிக்கப்பட்டு, ஹைப்பர் லூப் ரெயில் போக்குவரத்து இயக்கப்படும். ஏறக்குறைய காற்றின் வேகத்தைக் காட்டிலும் அதிகவேகமாகச் செல்லும்.

சமீபத்தில் எலான் மஸ்க்கின் நிறுவனம் இந்தியாவில் தாங்கள் செயல்படுத்த விருப்பமுள்ள வழித்தடங்கள் குறித்து மத்திய அரசுக்கு டுவிட்செய்துள்ளன. அதில் குறிப்பாக சென்னை- பெங்களூரு, சென்னை- மும்பை, பெங்களூரு- திருவனந்தபுரம் , மும்பை-டெல்லி ஆகிய வழித்தடங்களை குறிப்பிட்டு இருந்தது.
இது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தையும் கடிதம் மூலம் இந்த நிறுவனம் அனுகி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், சீனா, ஜப்பானைச் சேர்ந்த நிறுவனங்களும், சென்னை-பெங்களூரு இடையே புல்லட் ரெயில் குறித்த சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து வருகின்றன என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

இதில் ஹைப்பர் லூப் நிறுவனம் தனது இணையதளத்தில் வெளியிட்ட அறிக்கையில், “ இந்தியாவில் நாங்கள் ஹைப்பர் லூப் ரெயிலை இயக்கினால், மக்களுக்கு பஸ் கட்டணத்திலேயே சேவை வழங்க முடியும். இந்த கட்டணம் என்பது மக்கள் பயணம் செய்யும் நேரத்துக்கு மட்டுமே, போக்குவரத்து அல்ல.
கட்டுமானச் செலவைக் குறைக்கும் வகையில் பெரிய தூண்கள் அமைக்கப்பட்டு அதில் பைபர் குழாய்கள் பதிக்கப்பட்டு அதில் ரெயில்கள்செல்லும். இந்த ரெயிலை இயக்குவதற்காக குழாய்களின் மீது சோலார் தகடுகளும், ரெயில் செல்லும் பாதைகளில் காற்றாலைகளும் அமைக்கப்பட்டு அதில் இருந்து மின் உற்பத்தி செய்யப்பட்டு ரெயில்கள் இயக்கப்படும். காந்த விசை மூலம் இந்த ரெயில்கள்இயக்கப்படுகிறது. அதிகபட்சமாக 200 மைல் வேகத்தில் இயக்கலாம்.'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது ஹைபர் லூப் நிறுவனம், துபாய் மற்றும் அபுதாபி இடையே ரெயில்கள் பணியில் ஈடுபட்டு வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த பணியை முடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வர இருக்கிறது. இதன்மூலம், துபாய் மற்றும் அபுதாபி இடையிலான பயண நேரம் 90 நிமிடங்களில் இருந்து 12 நிமிடங்களாகக் குறைகிறது.
இது குறித்து மத்திய ரெயில்வேத் துறையில் உள்ள பொறியாளர்கள் தரப்பில் கூறப்படுகையில், “ இந்திய நகரங்களுக்கு இடையே அதிவேகரெயில்களை இயக்குவது நல்ல விசயம். ஆனால், அதற்கு பல காரணங்களால் 10 ஆண்டுகள் வரை ஆகும். அரசாங்க ரீதியாக ஒப்புதல் பெறவும் தாமதம் ஆகும்'' என்றனர்.
ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு பாலம் அமைத்து ரெயில் இயக்க ரூ. 300 கோடி செலவாகும் என்று கூறப்படுகிறது. ஆனால், இதை மறுக்குஹைபர் லூப்நிறுவனம், சான்பிரான்சிஸ்கோ மற்றும் லாஸ் ஏஞ்செல்ஸ் இடையே ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு ரூ. 72 கோடி மட்டுமே செலவாகும் எனக் கூறி இருக்கிறது
