சந்திரயான்-3 விண்கலம் நிலவை நெருங்கி வருவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-3 வின்கலம் எல்விஎம்-3 ஆனது, ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2ஆவது ஏவுதளத்தில் இருந்து கடந்த 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான்2 திட்டத்தின் மூலம் செலுத்தப்பட்ட ஆர்பிட்டர் ஏற்கெனவே நிலவை சுற்றி வருவதால் இந்த முறை லேண்டர், ரோவர் கலன்கள் மட்டும் ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. நிலவின் தென்துருவத்தில் ஆகஸ்ட் 23 அல்லது 24ஆம் தேதியில் சந்திரயானின் லேண்டர் கலனை மென்மையாக தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சந்திரயான்-3 விண்கலமானது ஏவப்பட்ட 16 நிமிடங்களில் புவி நீள் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. அப்போது, ராக்கெட்டில் இருந்து விண்கலம் பிரிந்து செல்லும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டிருந்தது. விண்ணில் இருந்து எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், ராக்கெட் பாகங்கள் விழும் காட்சி, விண்கலம் பிரியும் காட்சி ஆகியவை இடம் பெற்றிருந்தன.

புவி நீள் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வரும் விண்கலத்தை விஞ்ஞானிகள் தொடர்ந்து வருகின்றனர். பூமியை 5 முறை சுற்றிய பின்னர், புவி மற்றும் நிலவின் சம ஈர்ப்பு விசை புள்ளி பகுதியில் நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, புவி நீள் சுற்றுவட்டப் பாதையில் மூன்று சுற்றை சந்திரயான்3 விண்கலம் வெற்றிகரமாக முடித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, 4ஆவது சுற்றுப்பாதையிலும் சந்திரயான்3 விண்கலம் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும்: மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மீண்டும் வலியுறுத்தல்!

ஜூலை 17ம் தேதியன்று புவியின் 2ஆவது சுற்றுப்பாதையிலும், ஜூலை 18ம் தேதி 3ஆவது சுற்றுப்பாதையிலும் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதன் தொடர்ச்சியாக, தற்போது 4ஆவது சுற்றுப்பாதையிலும் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. வருகிற 25ஆம் தேதி மதியம் 2மணி முதல் 3மணிக்குள் ஐந்தாவது சுற்றுப்பாதைக்கு உந்து விசை மூலம் உயர்த்தப்படும் எனவும் இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

பெங்களூருவில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சந்திரயான்-3 தொடர்ந்து கண்காணிக்கபட்டு வருவதாகவும், சந்திரயான்-3 விண்கலம் நிலவை நெருங்கி வருவதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சந்திரயான்-3 விண்கலத்தை ஆகஸ்ட் 23ஆம் தேதி மென்மையாக தரையிறக்க திட்ட இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. முதலில் லேண்டர் தரைம் இறக்கியதும் அதிலிருந்து இறங்கும் ரோவர் ஆராய்ச்சிக்கு தேவையான தகவலை திரட்டுவதுடன், இந்திய தேசிய சின்னமான அசோக சக்கர சின்னம் மற்றும் இஸ்ரோவின் சின்னத்தை நிலவில் பதிக்கும். ரோவரின் பின்பக்க காலில் இந்த சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.