ஊழல் தொடர்பாக தன் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு மேல்முறையீடு செய்துள்ளார்

ஆந்திர மாநில திறன் மேம்பாட்டுக் கழகம் (APSSDC) ஊழல் தொடர்பாக அம்மாநில சிஐடி போலீசார் தன் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரை ரத்து செய்யக் கோரி ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

எஃப்ஐஆர் மற்றும் நீதிமன்ற காவலை ரத்து செய்ய மறுத்த ஆந்திர மாநில உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு மேல்முறையீடு செய்துள்ளார். அதில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் 17A பிரிவின் கீழ் உரிய அனுமதியை பெறவில்லை எனவும், அரசியல் காரணங்களுக்காக சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, சிஆர்பிசியின் 482வது பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது குறுகிய கால விசாரணை நடத்த முடியாது என்று கூறி சந்திரபாபு நாயுடுவின் மனுவை ஆந்திர உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிபதி கே.ஸ்ரீனிவாச ரெட்டி பிறப்பித்த 68 பக்க உத்தரவில், 40க்கும் மேற்பட்ட சாட்சிகளை விசாரித்து, வழக்கு தொடர்பான 4,000க்கும் மேற்பட்ட ஆவணங்களை சிஐடி போலீசார் சேகரித்துள்ளனர். விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தடை செய்யப்பட்ட நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என தீர்ப்பளித்தார்.

இதையடுத்து, சந்திரபாபு நாயுடுவை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிஐடி போலீசாருக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வந்தே பாரத் ரயில்களை காணொலி வாயிலாக தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

2014-2019 ஆட்சிகாலத்தில் இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக திறன் மேம்பாட்டு கழகத்தில் முறைகேடு நடந்ததாக ஆந்திர மாநில சிஐடி போலீஸார் 2021ஆம் ஆண்டில் சந்திரபாபு நாயுடு மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், திடீரென சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவர் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.