அமலாக்கத்துறை இயக்குனருக்கு பணி நீட்டிப்பு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு!
அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்.கே மிஸ்ராவின் பதவிக்காலத்தை நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது

அமலாக்கத் துறை இயக்குநரான சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலத்தை மூன்றாவது முறையாக நீட்டித்தது சட்ட விரோதம் என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இது தொடர்பான வழக்கில், சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவி நீட்டிப்பு ஆணையை ரத்து செய்தும், அவர் ஜூலை 31ஆம் தேதி வரை மட்டுமே அந்த பதவியில் இருக்கலாம் எனவும் கடந்த 11ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலத்தை நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு ஏற்கனவே 3 முறை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டதை சட்டவிரோதம் என உச்ச நீதிமன்ற கூறி இன்றுடன் 15 நாட்களே ஆன நிலையில், அவருக்கு பணி நீட்டிப்பு கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.
அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் மிஸ்ராவின் பதவிக் காலம் நிறைவடைந்த பிறகு மூன்று முறை அவருக்கு மத்திய அரசு பதவி நீட்டிப்பு வழங்கி உள்ளது. இதை எதிர்த்து காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வு, “சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவி நீட்டிப்பு ஆணை, உச்ச நீதிமன்றத்தின் 2021 ஆண்டு தீர்ப்புக்கு முரணானது. அதில், மிஸ்ராவின் பதவியை நவம்பர் 2021ஆம் ஆண்டுக்கு மேல் நீட்டிக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அமலாக்கத் துறை இயக்குநரின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் சட்டத்தினை இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு என்றாலும், கடந்த 2021ஆம் ஆண்டு சஞ்சய் குமார் மிஸ்ரா பதவியில் நீடிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் சிறப்பு ஆணையிட்டிருக்கிறது. எனவே, அவருக்கு 3ஆவது முறையாக பதவி நீட்டிப்பு வழங்கியது சட்டவிரோதம். அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.” என உத்தரவிட்டது.
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் காணாமல் போன குழந்தைகள் எண்ணிக்கை எவ்வளவு?
இருப்பினும், மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, ஜூலை 31ஆம் தேதி வரை சஞ்சய் குமார் மிஸ்ரா பதவியில் இருக்கலாம் என்றும், அதற்குள் அமலாக்கத்துறைக்கு புதிய இயக்குநரை நியமிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் வருகிற 28ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில், அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்.கே மிஸ்ராவின் பதவிக்காலத்தை நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவினை தாக்கல் செய்துள்ள சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வருகிற 28ஆம் தேதிக்குள் மனுவினை விசாரிக்குமாறு கோரிக்கை விடுத்தார். அதனையேற்று, வருகிற 27ஆம் தேதி இந்த வழக்கை விசாரணைக்கு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்திய வருவாய்த்துறை அதிகாரியான எஸ்.கே.மிஸ்ராவை, கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி 2 ஆண்டுகள் பணிக்காலம் என்ற அடிப்படையில் அமலாக்கத்துறை இயக்குனராக மத்திய அரசு நியமித்திருந்தது. ஆனால், அவரது பணிக்காலம் மூன்று முறை நீட்டிக்கப்பட்டு, தற்போது வரை அவர்தான் அமலாக்கத்துறை இயக்குநராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.